ஆறுதல் பரிசு

முன்னம் நேர்ந்த
காயத்தின் வலிக்கு
மிருதுவாய் ஒத்தடமிடுகிறது
உன் இப்போதைய அரவணைப்பு…
வலி குறைகிறது…
மறையுமா என்று தெரியவில்லை…!

பிறிதொரு நாளில்தான்
உணர்ந்துகொண்டேன்..
உன் பேரன்பின் சாமர வீசலால்
என் காயமாற்றிக் கொண்டிருந்த
அதே வேளையில்
என் தனிமை வாளால்
எத்தனை ஆழமாய்
உன் இதயம் கீறிவிட்டேனென்று...!

என் தனிமைக் கனலின்
புழுக்கத்தினால்தான்
உன்னிதயத்தின் ஈரப்பதம்
கண்களில் கண்ணீராய்
காட்சியளிக்கிறதோ....
அது வெறும் கண்ணீரல்ல கண்ணே…
என்னுள்ளக் கனலை
அணைக்கப் பொழிந்த கோடைமழை...!

உன் வருகை வரை
நம்பிக் கொண்டுதான் இருந்தேன்...
தோற்கடிக்கப் பட்டவனுக்கு
ஆறுதல் பரிசு
ஆறுதல் தராதென்று....!

தோல்வியின் விளிம்பிலிருந்து
விழுந்துவிட்டேன்....
கண் விழித்து பார்த்தபொழுது
உன் மடியில்
ஒரு குழந்தையாய் நான்...!

தோல்விக்கு ஆறுதல் பரிசாய்
நீயே கிடைப்பாயானால்
அடுத்தப் பிறவியிலும்
தோற்றுப் போக
நான் தயார்...!

நீ செய்த மனச்சலவையால்
மதம் மாறிவிட்டது
என் மனம்....
புதிய மதத்தின்
குருவாகவும் இறையாகவும்
நீயே இருக்கிறாய்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (7-Aug-18, 11:53 am)
Tanglish : aaruthal parisu
பார்வை : 71

மேலே