என்னிடமும் நீ தோற்கக் கூடாது
வானவில்லை நிமிர்த்தி
வசியம் செய்யப் பார்பவளே
வர்ணங்களின் எண்ணங்களை - நீ
மறந்து போவதேனடி?
ஒற்றை இதழ் கொண்டு
கொத்து முள்ளாய்
என்னை நீயும்
குத்திக் குத்திக் கொல்வதேனடி.?
பச்சைப் பிள்ளையாய் மனம்
உன்பின்னே
நாய்க்குட்டியாய் அலைகிறது
என் காதல்.
கூண்டுக்குள் அடைபட்ட கிளியாக -மனம்
வெளியில் பறக்க மறுத்தாலும்
உன் தாமரை முகம் காண
தவியாய் தவிக்கின்றேன்.
புயலுக்குள் அகப்பட்ட பூவாக
உனக்குள் நுழைந்து துடிக்கின்றேன்
பூகம்ப வாழ்வோடு
புதுமைகளை நோக்குகின்றேன்.
எரியும் தனலை ஒன்றாய்ச் சேர்த்து
எனக்கு ஊட்டி விடுகின்றாய்
உள்ளிருகும் உன்னை நினைத்து
கதறிக் கதறித் துடிக்கின்றேன்.
எத்தனை வெற்றிகள் நான் கண்டும்
உன்னிடம் மட்டுமே தோற்கின்றேன்.
என்னிடமும் நீ தோற்கக் கூடாதென்பதற்காக.