மலையாளக் கவிதை----------------- எம் கோவிந்தன் -
[தற்கால மலையாளக் கவிதைகள் என்றபேரில் தொகுப்பாக 1989ல் வெளிவந்த நூலில் உள்ள கவிதைகள் இவை. மதுரை பல்கலைகழகத்துக்கு இவை பாடமாக வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு கவிதை வாசிப்புக்கு உதவும்பொருட்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி தமிழ்துறையால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில்பேசியவற்றின் பதிவு இவ்வுரை ]
1
நானும் சைத்தானும்
-------------------------------
தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
‘யார் நீ” என்றேன்
“தெரியாதோ சைத்தானை?” என்றான்
“அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்”
என்றேன்
‘என்னுடையதை தந்தாய் நன்றி ”
என்று சிரித்து போனான்,
- எம் கோவிந்தன் -
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எம். கோவிந்தன் (1919-1989) ஒரு மலையாள எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழிலும் மலையாளத்திலும் ஏராளமான சிந்தனையாளர்கள் மேல் ஆழமான செல்வாக்கு செலுத்தியவர். கவிதை, கட்டுரைகள், அரசியல், சினிமா என பல துறைகளில் பங்களிப்பாற்றியிருக்கிறார்
திரிச்சூர் அருகே பொன்னானி என்ற ஊரில் 1919 ல் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமையால்முறையான கல்வி பயிலவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆரம்பநாட்களில் அதில் தீவிரமாக ஈடுபட்ட கோவிந்தன் அதன் பின்னர் அதில் இருந்து விலகி எம். என். ராயின் ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தார். சென்னை அரசு ஊழியராக 14 வருடம் பணியாற்றினார். எம். என். ராயின் சிந்தனைகளில் தீவிரமான ஈடுபாடுகொண்டவராக இருந்தார்.
சென்னையில் ஹாரீஸ் ரோட்டில் இருந்த இவரது இல்லம் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கூடும் இடமாக இருந்தது. தமிழில் கி. ஆ. சச்சிதானந்தம், சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவரிடம் நெருக்கமானவர்களாக இருந்தனர். மலையாளத்தில் எம். கங்காதரன், ஆற்றூர் ரவிவர்மா, பி. கே. பாலகிருஷ்ணன், ஆனந்த், சச்சிதானந்தன், ஓ. வி. விஜயன் போன்றவர்களை இவரது மாணவர்களாகக் கருதபடுகிறார்கள்.
கோவிந்தன் ”நவச்க்தி”, ”கோபுரம்” ஆகிய சிற்றிதழ்களை நடத்தினார். ”சமீக்ஷா” என்ற சிற்றிதழை 1967 முதல் சென்னையில் இருந்து கொண்டு மலையாளத்தில் வெளியிட்டார். அதில் நல்ல தமிழ் சிறுகதைகளை வெளியிட்டார். மலையாளத்தின் புதிய அலை இலக்கியம் இந்த இதழில் உருவானதுதான்.
1989 தன் மனைவியின் சொந்த ஊரான குருவாயூரில் மறைந்தார். இவருக்கு ஒரே மகன். மானவேந்திரநாத். இவர் ஒரு நாடக நடிகர். எம். கோவிந்தன் நினைவாக கேரளமாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு கேரள கலைக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக்கலைகளுக்கான அமைப்பு இது. திரிச்சூரில் எம்.கோவிந்தன் நினைவுப்பேருரை வருடம் தோறும் நிகழ்த்தப்படுகிறது.
சென்னை ஹாரீஸ் சாலையில் வாழ்ந்த கோவிந்தன் 1989ல் மறைந்தார். அவரது நினைவாக பய்யன்னூர் அருகே ஒரு நாட்டுப்புறக்கலைகளுக்கான மையம் செயல்படுகிறது. திரிச்சூரில் ஓர் ஆய்வுமையமும் செயல்படுகிறது
சென்னை ஹாரீஸ் சாலையில் வாழ்ந்த கோவிந்தன் 1989ல் மறைந்தார். அவரது நினைவாக பய்யன்னூர் அருகே ஒரு நாட்டுப்புறக்கலைகளுக்கான மையம் செயல்படுகிறது. திரிச்சூரில் ஓர் ஆய்வுமையமும் செயல்படுகிறது
படைப்புகள்
கோவிந்தனின் கவிதைகள்
கோவிந்தனின் கட்டுரைகள்
நோக்குகுத்தி [நீள்கவிதை]
சர்ப்பம் [கவிதைகள் ]
நோக்குகுத்தி [திரைப்படம். இயக்கம் மங்கட ரவி வர்மா]
--------------------------
கேரள சிந்தனையை ஆழமாக பாதித்தவை கோவிந்தனின் நேரடி உரையாடல்கள். கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என நிறையவே எழுதியிருக்கிறார். சமீக்ஷா என்ற அவரது சிற்றிதழே கேரளத்தில் நவீன இலக்கியத்தை உருவாக்கியது. இன்றைய முதல்தலைமுறை நவீன எழுத்தாளர்கள் பெரும்பாலும் அவரால் தூண்டுதல் கொண்டவர்கள். சுந்தர ராமசாமியும் அவரை தன் வழிகாட்டியாகச் சொல்வதுண்டு
வளரும்