தொடருந்து பயணம் - முற்றிலும் கற்பனை கதை

கூஉ சிக்கு புக்கு கூஉ சிக்கு புக்கு கூஉ
என்று காற்றின் வழியே காதில் விழ நானும் திரும்பி நோக்கினேன்.
கடபுட குடக் கடபுட குடக் கடபுட குடக் என்ற ஓசையில் என்னை கடந்தே நின்றது தொடருந்து.

ஏனப்பா பேந்த பேந்த முழிக்கிறாய்?
இதற்கு முன்னாடி இரயிலேயே போனதில்லையா?
என்றொரு பெண் குரல் கேட்டது.

போனதில்லைங்க.
என்றவன் அங்கிருந்து நகர்ந்தேன்.
நான் போக வேண்டிய பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து இருக்கையில் அமர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இருக்கையில் அமர்ந்தவன் சற்று பெருமூச்சு விட்டபடி நிமிர்கையில்,
அட! தேடி கண்டுபிடிச்சு வந்துட்டியே!
என்றது ஒரு பெண் குரல்.

யாருடா அது? நம்மலை பாலோ பண்றாங்களானு நிமிர்ந்து பார்த்தால் இது வரை பார்த்திராத ஒரு பெண்ணின் முகம் தென்பட்டது.
சற்று புன்னகையோடு நின்றிருந்தது என்றே சொல்லலாம்.

நான் எதுவும் பேசவில்லை.
கைப்பையில் தன் மடியில் வைத்தபடி எதிரே அமர்ந்தாள் அவள்.
நான் அவளை பார்ப்பை தவிர்த்து ஜன்னலோரமாக பார்வையை ஓடவிட்டேன்.

தன் எடையைவிட அதிக எடை தூக்கும் தொழிலாளிகள்,
பரப்பரப்பாக சென்றும், வந்தும் கொண்டிருக்கும் மக்கள்,
இரயில் அறிவிப்புகளின் ஒலி என்று சாதாரணமாகத் தோன்றியது.

சரியென்று கைபேசி எடுத்து நான் எழுதிய தேசபக்தியும், மனிதநேயமும் தொடர்கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்,
சற்று நேரத்தில் கூஉஊ என்று சங்கு ஊதியபடி டடக் டடக் என்று கிளம்பியது தொடருந்து.

ஏப்பா நீ தான அது?
முகநூலில் கவிதைங்கற பேருல கதை எழுதற ஆளு?
என்றாள் அவள்.

என் எழுத்துகளைப் படிச்சிருக்கீங்களா?
என்றேன் நான்.

தூக்கம் வரலனு முகநூல் வந்தால் பெரிசா நீ எழுதுவையா வந்து நிற்கும்.
அதிலொன்றை படிக்கும் போதே தூக்கும் சொக்கிடும்.
கைபேசியை அப்படியே வச்சிட்டு தூங்கிடுவேன்.
என்றாள் அவள்.

நல்லது. தூக்கமற்ற கண்களுக்கு தூக்கம் தரும் வலிமை என் எழுத்துகளுக்கு உள்ளது என்பதை கேள்விப்படும் போது சந்தோஷமாக உள்ளது.
நன்றிகள்.
என்று கூறிவிட்டு மீண்டும் கைபேசிக்குள் புகுந்தேன்.

ஆமா, என் சில நேரங்களில் சோகமாகவே எழுதுகிறாய்.
நல்ல உற்சாகமா எழுதலாமே!
என்றாள் அவள்.

உற்சாகமாக எழுதும் போது அது என் கற்பனையாகி விடுகிறது இந்தக் கதை போல.
சோகமான எழுத்துகளில் உண்மையை எழுதினேன் என்கிற உற்சாகம் பிறக்கிறது.
என்றேன் நான்.

அட! என்னப்பா நீ? வாழ்ந்து முடித்தவன் போல் பேசுகிறாய்!
என்றாள் அவள்.

வற்றாத நீரூற்றாய் அனுபவம் நிறைந்த வாழ்வில் இருபிரிவினர் தான்.
ஒன்று ஏமாற்றுவோர்.
மற்றொன்று ஏமாற்றப்படுவோர்.
இதில் பிறரை ஏமாற்றி மகிழ்ச்சியடைவதை விட ஏமாற்றப்பட்டு துன்புறுவது மேல் என்பது என் கருத்து.
என்றேன் நான்.

அது என்னமோ?
என்றவள் கொட்டாவி விட்டாள்.
என் பேச்சுக் கூட தூக்கத்தை தருகிறது என்பது புரிந்தது.

சாரி. கொஞ்சம் உறக்கம் வருகிறது.
நான் கொஞ்சம் படுத்திருக்கேன்.
அடுத்த நிலையம் வந்தும் எழுப்புங்க என்றவள் தனது இருக்கையிலேயே படுத்துக் கொண்டாள்.

அவ்விடத்தில் நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம்.
அவள் படுத்த சிறிது நேரத்தில் நன்றாக தூங்கிப்போய்விட்டாள்.

தூங்கின் நிம்மதியாக தூங்குக அஃதில்லார்
தூங்கலின் தூங்காமை நன்று.
என்று குறள் வேண்பாவில் எழுதி வைத்துவிட்டு கைபேசியில் படித்த கதையைத் தொடர்ந்தேன்.

நான் தொடருந்து பயணம் செல்வதாய் யாரிடமும் சொல்லவில்லை.
யார் இவள்?
இவளின் பெயர் என்ன?
என் எழுத்துக்களைப் படித்ததாய் சொன்னாளே!
என்று உள் யோசனை கிளம்பியதை தடுப்பாணை பிறப்பித்து அமைதியானேன்.

ஒருவரைப் பற்றி அறிய முற்படும் போது நம்மை அறியாமலே நேசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
என்ற மனோதத்துவம் அறிந்ததால் அந்த யோசனையை ஆரம்பத்திலே பிடுங்கி எறிந்தேன்.

சிறிது நேரத்தில் தொடருந்து அசைவில் கண்கள் விழித்தாள் அவள்.
நான் சற்று கண்களை மூடிக் கொண்டிருந்தேன்.
நான் தூங்குவதாய் நினைத்தவள் ஒரு நூலெடுத்து என் மூக்கின் துளையில் விட வந்தாள்.
நூல் என் மூக்கை நெருங்கையில் கண்களை திறந்தேன்.

என் மூக்கு அருகில் தூசி இருந்ததாகவும்,
அதை எடுக்க நெருங்கியதாகவும் கூறியமர்ந்தாள்.
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் கண்களை முடினேன்.

லூசு என்று தன்னைத் தானே திட்டியவாறு அமர்ந்தாள்.
டடக் டடக் டடக் வேகம் குறைந்து கொண்டே போய் நின்றது தொடருந்து.

அவள் சென்று வருகிறேன் என்று கிளம்பிச் சென்றுவிட்டாள்.
அவளது பெயரைக் கூட கேட்கவில்லை.
என்னை தெரிந்து போல் அவளது பாதுகாப்பின் காரணமாக காட்டியிருக்கலாம் என்று நினைத்தேன்.
அதை அதோடு மறந்துவிட்டு
தொடருந்து விட்டிறங்கி வீட்டிற்குச் சென்றேன்.

சில நாட்கள் கடந்திருந்தது.
அன்று காலையே என் கைபேசி ஒலித்தது.
ஒலித்ததை எடுத்து ஒலிக்கச் செய்து காதில் வைத்தேன்.

ஹலோ நான தான் பேசிரேன் பா. என்னை ஞாபகமிருக்கா. என்று ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.

மன்னிக்கவும் நீங்க யாருனு தெரியாதுங்க.
என்றதொடு தொடர்பை துண்டித்தேன் நான்.

மறுபடியும் அழைப்பு வந்தது.
எடுத்தேன்.

டேய்! என்னை மறந்திட்டீயாடா? என்று உரிமையோடு ஒலித்தது அந்த குரல்.

ஹலோ! நீங்க யாருனு சொல்லுங்க! எனக்கு தெரியல! என்றேன் நான்.

அன்று இரயிலில் பேசினேனே! என்றாள் அவள்.
ஓ! நீங்களா மேடம்! என்றேன் நான்.

என்னடா! மேடம்னு சொல்லுற?
என்றாள் அவள்.

உங்க பெயர் எனக்கு தெரியாதே! அதான்.
என்றேன் நான்.

என் பெயர் உனக்கு தெரியாதா?
அப்போ தெரிஞ்சமாதிரி ஏன்டா பேசுன?
என்றாள் கோபமாக.

ஹலோ! நான் வந்து பேசல.
நீங்க தான் பேசுனீங்க.
என்றேன் நான்.

ஆமாடா! உன்னை கண்டது கண்டுபிடிச்சு பேசினேன்.
நீ தான் என்ன மறந்துட்ட!
என்று அவள் சொல்கையில் விசும்பி அழுவது போல் தோன்றியது.

ஏம்மா அழுறீங்க? உங்க பெயரை மட்டும் சொல்லுங்க.
என்றேன் நான்.

நந்தினி என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார்.
சற்று சிந்தித்தேன்.
ஆம், அவள் நந்தினியே தான்.
எப்படி மறந்தேன் நேசித்த அவளை?

அவள் தொடர்பு கொண்ட எண்ணை அழைத்தேன்.
நம்பர் சுவிட்ச் ஆப் என்றது.
காலப்போக்கில் உபயோகத்தில் இல்லை என்றானது.
நான் மட்டுமே என் எழுத்துகளுடன் வாழ்கிறேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Nov-18, 1:29 am)
பார்வை : 440

மேலே