பிரபஞ்சன் என்னும் இலக்கிய விசும்பன்
ஆதிக்கம் சுமந்த
அதிகார எழுத்துகளின்
கழுத்துக்குச் சுளுக்கெடுத்த
எழுத்தாளனே !
நீ புதுவையில் தோன்றினாலும்
மதுவகை அல்ல !
மாறாக மதுக்குடுவை மத்தியில் தோன்றி மயக்கம் தெளிவித்த
மைக்குடுவை நீ !
எதை எதையோ
கருக்கொண்டு
கதை எழுதியவர்கள் மத்தியில்
மனிதநேய
விதை கொண்டு
கதை எழுதிய
கருத்தாளன் நீ !
நீண்டு கிடந்த
இலக்கியத்தில்
நீட்டிக்கொண்டிருந்த
முட்களெல்லாம்
உன் பேனா முள்ளின்
கூர்மை கண்ட வெட்கத்திலேயே
கூனிக்குறுகி
முனை மழுங்கி
முறிந்து போயின !
உன் விமர்சனக் கணைகளுக்கு
விதிவிலக்கு இல்லை
அவற்றில்
வேஷம் போட்ட
விதிகளும் எரிந்துபோயின
வெளிச்சம் தராத
விளக்குகளும் எரிந்து போயின !
மானுடம் வெல்ல
இலக்கிய
வானத்தை வசப்படுத்திய
ஞானத்தின்
வல்லூறு நீ !
மூடத்தனம் மூடிக்கிடந்த பொதுப்புத்தியை
உடைத்த
புதுப் புத்தி உனது !
பெண்ணுக்கு உரிமையைப்
பெண்ணை விடப்
பெரிதாய்க் கேட்டவன் நீ
மானுடத்தின்
இருப்பைப் பேசிய
மானுடன்
இப்போது
காலத்தின் இருப்புக்குள்
கரைந்து விட்டாய் !
இலக்கியம் இருக்கும் வரை
ஒரு மகா நதியாய்
எங்கள்
மனங்களில் பயணிப்பாய் !
உன் நினைவை
எங்கள் கண்ணீரால்
காப்போம் !
உன் கனவை
எங்கள் கருத்தினால்
காப்போம் !
வருத்தங்களுடன்..
_ நவீன் இளையா
***🙏🏻😓***