மனைவி
பெண்ணொருத்தி,
என் பிறப்பின் போது அறிந்ததில்லை,
அவள் பிறப்பையும் தெரிந்ததில்லை,
கல்யாண வயது, பெண்ணைக் காட்டினார்கள்,
திருமணம் முடிந்தது.
மனைவி என்று அன்று என் கரம் பற்றினாள்.
மனைவி.......
மனதிலும், மனையிலும், என்றும்
நீங்காதிருப்பவளே மனையாள்.
மனதை ஆள்பவள்,
மனையையும் ஆள்பவள்.
வாழ்வில் சரிபாதி அல்ல,
முழுமையும் தந்து,
முழுதும் பெறுபவள்.
வாழ்க்கையில்,
தந்தது, என்தன்னை
கொண்டது, உன்தன்னை,
என்பதே அவள் கண்ட சித்தாந்தம்.
வாழ்ந்து, சிறந்த காலங்கள்
உருண்டோட,
நின்று நிழலாடும் நினைவுகள்,
அசைபோட,
கோபமும், தாபமும்,
என்றும் இருந்த போதும்,
மாறவில்லை பாசம்,
மறக்கவில்லை நேசம்.
வயது கூட, கூட,
என்றும் அருகிருக்கவே
ஏங்கும் மனசு,
ஏனென்று சொல்ல,
முடியவில்லை, தெரியவில்லை.
உடம்பில் அசதி,
சுணக்கம் என்றாலே,
கலங்குது மனசு.
உடல் அவளது ,
அவள் மனது, என்னுடையது தானே!