தாராவின் பயணம்

விடுமுறை முடிந்தது
என்ற ஏமாற்றத்துடன்
மாறுதலே வாழ்க்கை
என தேத்திக்கொண்டே ஏறினேன் பேருந்து....

பேருந்தில் ஏறிய
எல்லோரும் எடுத்தார்கள்
பயணச்சீட்டு
நானும் எடுத்தேன்...

எடுத்து முடித்த பின்பு
யாரோ டாட்டா சொல்வது போல் ஒரு சப்தம்
ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கையில்
தெரிய வந்தது "நன்றி மீண்டும் வருக" என நீல பலகை கத்தியது அக்கறையுடன்...

அக்கறையாக அந்த
இரவு பொழுதை
பலர் உறக்கத்திலே உறைந்தனர்
சிலர் அலைபேசியில் அலற்றினர்
நானும் ஓட்டுனரும் மட்டும் பொறுப்பாய் ஓட்டினோம்...

ஓட்டுனர் வண்டியை ஓட்டினார்
நான் என் நினைவுகளை ஓட்டினேன்...

ஓட்டிய நினைவோடு
ஜன்னலிடம் அனுமதி கேட்டு
என்னை குனிந்து பார்த்த
தெரு விளக்குகள்
பதிலுக்கு நான் அன்னார்ந்து
பார்த்த விண்மீன்கள்
இந்த அத்தனையும்
பொறுமையோடு பார்த்த நிலா
என அப்படியே போய் கொண்டு இருந்தது பேருந்து பயணம்...

பயணம் மெல்ல மெல்ல அழகானது
பூட்டாத பூவால்
கலப்படம் இல்லாத காற்றால்
கரையேறிய குப்பையால்
ரோலர் கோஸ்டரான பாலத்தினால்
அனாதையான ரோட்டினால்...

ரோட்டில் ராஜா போல்
நான் பயணித்த பேருந்து மட்டும்
என அப்படியே அழகாய் போன பயணத்தில்
அலட்டி கொள்ளாமல்
அயர்ந்து போனேன்...

போன பாதைகள் எல்லாம்
பெருமிதமாய்
வரும் பாதைகள் எல்லாம்
புதிராய் இருக்க
விறுக்கென விழித்தேன்
"சென்னை எல்லாம் இறங்கிக்கோ" என்ற சப்தத்தில்
இந்த தடவை எட்டி பார்க்கவில்லை
ஏனென்றால் கத்தியது நடத்துனர்
இருந்தாலும் எட்டி பார்த்தேன்
"சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது"
என நீல பலகை
அன்போடு வரவேற்றது...
என்னோடு
என் கனவுகளையும்.....😊

எழுதியவர் : தாரா (3-Feb-19, 11:05 am)
சேர்த்தது : தாரா
பார்வை : 1403

மேலே