பள்ளியுட்போய் குருவிடத்தே வாய்ந்துணரின் ஓங்கியெழுவர் உயர்ந்து - இனநலம், தருமதீபிகை 93
நேரிசை வெண்பா
தன்னிடத்தே யுள்ள தனிக்கலையைப் பள்ளியுட்போய்
மன்னு குருவிடத்தே வாய்ந்துணரின் - மின்னுகின்ற
பூங்கொடியோர் கொம்பைநன்கு புல்லியெழல் போலின்பம்
ஓங்கி யெழுவர் உயர்ந்து. 93
- இனநலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இயல்பாகவே தம்மிடம் அமைந்துள்ள கலை அறிவை ஆசிரியனிடம் அணுகி ஆராயின் அம்மாணவர் கொழுகொம்பு வாய்ந்த பூங்கொடிபோல் இனிதே ஓங்கி எழுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், கல்வி வளரும் காட்சி காட்டுகின்றது.
பள்ளி - கல்வி பயிலும் இடம். மனன சீலரான முனிவர் வசிக்கும் ஆச்சிரமத்தையே முதலில் இது குறித்து வந்தது.
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும், (மணிமேகலை)
என்பதில் பள்ளி நிலை அறிக. முன்பு இங்ஙனம் நின்ற அது பின்பு பிள்ளைகள் படிக்கும் இடத்தைச் சுட்டியுள்ளது உள்ளப் பள்ளத்துள்ள கலையை இனிது பயிலும் நிலையமாதலின் பள்ளி என நேர்ந்தது. இளமையும் இனிமையும் வளமையும் கருதிப் பிள்ளைகளைப் பூங்கொடியோடு ஒப்புற வைத்தது.
ஒவ்வொரு பிள்ளையிடமும் அறிவு உள்ளத்தே உறைந்துள்ளது. அது நூல்களால் ஒளி பெற்று வளர்ந்து வெளியே விரிந்து எழுகின்றது. அவ்வளர்ச்சிக்கு ஆசிரியர் ஆதரவாய் நின்று கிளர்ச்சி தந்தருள்கின்றார்.
புறத்தே குருவின் துணை நன்கு அமைந்திருந்தாலும் தன் அகத்தே மாணவன் கருத்து ஊன்றி உணரவில்லையானால் கல்வி யறிவு விருத்தியாகாது.
The more the power of Concentration, the greater the Knowledge that is acquired.
மன ஒருமைக்குத் தக்க அளவே கலையறிவு பெருகி எழுகின்றது' எனத் தமது அனுபவத்தை விவேகானந்தர் இவ்வாறு பலரறிய வெளியிட்டுள்ளார்.
ஊன்றிய கருத்தும், உய்த்துணர்வும், நல்ல நூல்களும், தேர்ந்த குருவும் அகத்தும் புறத்தும் முறையே கல்விக்குக் துணைகளாயுள்ளன; இந்த நல்ல இனங்களைப் பேணிக் கல்வியில் ஒல்லையில் உயர்ந்து கொள்க என்பது குறிப்பு.