இந்திய ஊடகத்திடம் ஓர் தமிழ்க் கேள்வி

ஊடகமின்று ஊடுறுவுகிறது எத்திசையிலும் - ஆனால்
ஊட வேண்டிய அத்திசையைத் தவிர..!
ஆம்!
ஊடக தர்மம் மறந்து
ஊழல் தர்மம் பூண்டு
இயங்கும் இந்திய ஊடகமே..!
நீ..,

கந்துவட்டியாலும் கலவிக்கொடுமையாலும்
என்தமிழ்க் குடும்பம்படும் கொடுந்துயரைக்
காணாமுகமாய்க் கடந்துசெல்லும்
கபட ஊடகம்.....

விளைச்சல்பொய்ப்பாலும் விலைவாசிஉயர்வாலும்
என்தமிழ் வித்துக்கள்படும் வேதனையை
விவரிக்காமல் விரைந்துசெல்லும்
வினோத ஊடகம்....

பெருவெள்ளத்தாலும் பேரிடர்புயலாலும்
என்தமிழ் பூக்கள்படும் பெருந்துயரைப்
பாராமுகமாய்ப் பயணித்துச்செல்லும்
பச்சோந்தி ஊடகம்...

அரசாங்கத்தாலும் ஆட்சியாளர்களாலும்
என்தமிழ் அரசர்கள்படும் அல்லல்களை
ஆலோசிக்காமல் அகன்றுசெல்லும்
அடிமை ஊடகம்...

என்தமிழும் தமிழனும் தான்படும்
இன்னல்களை எடுத்துக் கூறுவதைக்
கேளாமுகமாய் கடந்துசெல்லும்
இச்சை ஊடகம்...

ஊடகம் என்ற பெயரில் தமிழனுக்கு
உதவா விடினும் பரவாயில்லை - ஆனால்
உபத்திரவம் செய்யா ஊடக மேதுமுண்டோ...!?

எழுதியவர் : பூங்கொடி (27-Apr-19, 12:34 pm)
சேர்த்தது : Poonkodi
பார்வை : 36

மேலே