காலையில் துயில்பவனின் கடிதம்- 2

ஜெ,



கடிதம் அனுப்பிய பிறகும், பின் வெளிவந்த பிறகும் எனக்கு பயம் ஏற்பட்டது. vulnerability யை முழுவதும் வெளிப்படுத்திவிட்டோமோ? இனிமேல் இலக்கிய சந்திப்புகளுக்கு வந்தால் கூட அனுதாபத்துடன் தான் பார்ப்பார்களோ! என்றெல்லாம் எண்ணங்கள். ஆனால் எழுதிய பிறகு ஒவ்வொருநாளும் அதிகமாக மீண்டுகொண்டிருக்கிறேன். சிலர் எனக்கு அன்புடன் கடிதம் எழுதியிருக்கிறார்கள். லோகமாதேவி அம்மா அவர்களும், ஷாகுல் ஹமீது அவர்களும் அளவுகடந்த அக்கறையை காட்டுகிறார்கள்.



மேலும் என்னுடைய கடிதத்தை வாசித்தோ, கேள்விப்பட்டோ தூக்கமின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்காவுது நல்ல தூக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.



இவை எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் மட்டும் தான்.உங்களுக்கு மிகப்பெரிய நன்றி.



எல்லா விஷயங்களையும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்து விடக்கூடாது என்பதிலேயே என் கவனம் எப்போதும் இருக்கிறது. ஆனாலும் ஒன்று புரிந்தது. என் அப்பாவிற்கு அடுத்து என் மேல் அதிக அக்கறையை காட்டுகிறீர்கள்.



கிளீனிக் ஆரம்பிப்பதற்கு மாலை 6 to 10pm மாதத்தில் எவ்வளவு நாள் என்னால் செல்லமுடியும் என்கிற அட்டவனையை நானும் அப்பாவும் போட்டு பார்த்தோம். என்னுடைய துயில் சக்கரம் சுழன்று கொண்டிருக்குப்பதை வைத்து பார்த்தால் நாற்பது நாட்களுக்கு 15 to 20 நாட்கள் தான் மாலை 6 to 10 செல்ல முடியும் போல. இரவு தூக்கம் கிடைக்கும் சில நாட்களில் நாள் முழுவதும் கூட கிளினிக்கில் இருந்து விடுவேன். ஆனால் இந்த நிலையின்மை எனக்கு சிறிது தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



மனநல மருத்துவர் முரளி சேகர் அவர்களின் கடிதத்தை வாசித்தேன். என் நலனின் மேல் அக்கறை கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. அவருக்கு என் நன்றிகள். நம் நாட்டில் இருக்கும் அணைத்து மனநல மருத்துவர்களின் குரலும் இதுவாகவே இருக்கும்.



அவர் கடிதத்தை பற்றி மேலும் பேசுவதற்கு முன் இதை சொல்லவேண்டியிருக்கிறது. பொதுவாக Non 24 அல்லது DSPD என்று diagnosis வர வேண்டிய இடத்தில் மனநல மருத்துவர்கள் என்னென்ன diagnosis தருகிறார்கள் என்று ஒரு பட்டியலிடலாம்.



Somatic Symptom Disorder and Illness Anxiety Disorder- Hypochondriasis (அந்த நோய் இருக்குமோ இந்த நோய் இருக்குமோ என்று நினைத்து பயப்படுவது)


Insomnia


Depression


Generalized Anxiety Disorder and Obsessive Compulsive Disorder


Sleep Apnea


Chronic Fatigue Syndrome


Restless Leg Syndrome


Fibromyalgia




நம் நாட்டில் பலர் இந்த diagnosisகளை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தூக்கத்தில் பிரச்சனை இருக்கும். சரியாக தூங்க முடியவில்லை என்று மனநல மருத்துவர்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். இதில் அட்லீஸ்ட் ஐந்து முதல் பத்து சதவிதம் பேருக்கு Non 24/DSPD இருக்க வாய்ப்பிருக்கிறது. தூக்கம் கிடைத்தால் பெரும் விடுதலையை அடைவார்கள். ஆனால் தவறுதலான diagnsosis களை பெற்று தவறுதலாக வெவ்வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு வாழ்க்கை முழுவதும் போராடுகிறார்கள்.



இதற்கு ஒரே காரணம், மனநல மருத்துவர்கள் அவர்களது துறையிலேயே update ஆகாமல் இருப்பது தான்(இன்னும் 1980 லேயே நிற்கிறார்கள்). International Classification of Diseases மற்றும் Diagnostic Statistic Manual லில் பலவருடங்களாக இடம் பெரும் இரு conditionகளை பற்றி இவர்கள் இன்னும் அறியவே இல்லை.



என் கடிதத்தை வாசிக்கும் போதே Hypochondriasis, Anxiety, Body Dysmorphia, Difficulties of living with an autistic brother ஆகியவை தான் முதன்மையாக அவருக்கு தெரிகின்றன. என்னை போலவே இதே symptomsகளோடு யார் மனநல மருத்துவர்களை அணுகினாலும் இதையே தான் செய்வார்கள். மேற்கொண்டு கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களது diagnosis sheet ல் இந்த எட்டு பெயர்களில் ஒன்றை எழுதுவார்கள்.



//”இப்படி கோபத்தை வெளிப்படுத்துபவர்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். “நீங்கள் உங்கள் மருத்துவரிடமோ, குடும்பத்தாரிடமோ என்ன எதிர்பார்த்தீர்கள் அல்லது என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதே. உங்களின் கஷ்டங்களுக்கான அங்கீகாரத்தையா அல்லது புரிதலையா அல்லது ஆதரவையா? இது அனைத்துமாகவே கூட இருக்கும். அப்படி இருந்தால் அவர்களின் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு இவை அனைத்திற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்கி விடும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?”// என்று குறிப்பிடுகிறார்.



எனக்கு மனநல மருத்துவர்கள், துயில்நிபுணர்கள், நரம்பியல்நிபுணர்கள் மேல் கோபம் உண்டு. ஆனால் எனக்காக இல்லை. இன்னும் பலர் என்னவென்றே தெரியாமல் கடைசி வரை மாத்திரைகளைகளோடு துன்பப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்களே. அவர்களை யார் மீட்பது என்பது தான் என் வருத்தமும் கோபமும்.



Five Stages of Grief பற்றி சொல்லியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் திரும்பத் திரும்ப அடித்து துவைக்கபடும் பாடம் இது. எனக்கே ஒரு நாலு தடவை எடுத்திருப்பார்கள். தூக்கமில்லாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் தூக்கம் கிடைக்க தொடங்கியவுடன் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டார். பெரு மகிழ்ச்சியை அடைவார். நான் அந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன். முதற்கட்டமாக இதுவே நிகழும். வெகுநாட்களுக்கு பிறகு தனிமையை உணரத்தொடங்கிய போது இந்த stages ஐ நான் அடைந்திருக்கலாம்.



//”உங்களின் தலையாய முயற்சி அனைத்தும் இந்த கட்டங்களை தாண்டி ஐந்தாவது கட்டத்தை சீக்கிரம் அடைவதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது “எனக்கு இந்த அறிய வகை வியாதி இருக்கிறது. இதனை புரிந்துகொள்பவர்களோ ஏற்றுக்கொள்பவர்களோ மிகவும் அரிது தான், அவர்கள் மருத்துவர்களாகவே இருந்தாலும் கூட. ஆனால் என் வாழ்க்கையை இந்த வேண்டாத வியாதியின் காரணமாக நான் இழக்க விரும்பவில்லை. இந்த வியாதி என் ஒரு அங்கமே மாறாக இதுவே நானில்லை !” என்ற ஏற்றுக்கொள்ளுதல் உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.”//



DSPD யின் prevalence மொத்த மக்கள் தொகையில் 1 in 600 என்று கணிக்கப்படுகிறது. Non 24 rare ஆக இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அதிகம் கண்டுபிடிக்கப்படமால் விடப்படுகிறது என்பதே உண்மை ( இதுவரை Non 24/DSPD என்று official ஆக diagnosis செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் அல்லது ஆஸ்திரேலியர்கள்.. என் ஒருவனை தவிற. ஒரே காரணம்.இதை அறிந்த மருத்துவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் இப்போது தான் பெயரையே கேள்விப்படுகிரார்கள்).


எனக்கு இந்த அறிய வகை வியாதி இருக்கிறது என்று நான் நினைக்க விரும்பவில்லை. “இந்தச் சிக்கல்கூட ஒரு தனித்துவம்தானோ என்னவோ? அது உங்களுக்கு பிறர் உணரவியலாத ஓர் உலகுக்குச் செல்ல வழிகாட்டுகிறதோ என்னவோ? இதுவே உங்களுக்கு சிந்தனையில் – இலக்கியத்தில் தனியான உலகை, தனிநோக்கை உருவாக்கி அளிக்கலாம்.” என்று நீங்கள் கூறிய வரிகள் தான் இந்த பதினைந்து நாட்களில் என்னை அதிகாமாக மீட்டுக்கொண்டிருக்கின்றது. அதையே நான் எப்போதும் நினைக்க விரும்புவேன்.


//”தற்போது உள்ள அறிவியலின் படி என் வியாதியை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் இந்த நிலையே எதிர்காலத்திலும் நிலைக்கும் என்று நான் நினைக்க தேவை இல்லை.”//



எனது உடல்கடிகாரம் ஒரு நாளுக்கு இருபத்தியைந்து மணிநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் உலகம் இருபத்திநான்கு மணிநேரத்தில் சுற்றி விடுகிறது. இதனால் தான் நான் தூங்கும் நேரம் தினமும் சராசரியாக ஒரு மணிநேரம் தள்ளிச் செல்கிறது. இதுவே Non 24 என்பதன் பெயர்காரணம். மற்ற மக்களை விட எனது நாட்களுக்கு ஒரு மணிநேரம் அதிகம் அவ்வளவு தான். இந்த condition க்கு ஒரு தீர்வை கண்டுபிடித்து அதன்வழி இந்த மனிதர்களையும் மற்ற மனிதர்கள் போல் ஆக்குவது சரியென்று எனக்கு தோன்றவில்லை. Negative Eugenics கொள்கையை கடைபிடித்தால் இந்த மனிதர்கள் உருவாவதை நிறுத்தலாம்.



முன்பே சொன்னது போல் இந்த மனிதர்கள் இயற்கையை கொண்டாடுகிறார்கள். கலையை நேசிக்கிறார்கள். இலக்கியத்தை வாசிக்கிறார்கள். சிலர் எழுதவும் செய்கிறார்கள். தனிமை மட்டும் தான் பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது. Non 24 கொண்ட சிலர் அமெரிக்காவில் இணைந்தும் வாழ்கிறார்கள். எனவே இதை “வியாதி, வியாதி” என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவது நன்றாக இல்லை.



நான் இப்போது என்னை victim ஆக உணரவில்லை. எப்படியும் எதையாவுது செய்து கொஞ்சம் சம்பாதித்து கொண்டு என் ஆற்றலையும் நேரத்தையும் வாசிக்க எழுத பயன்படுத்திக்கொள்வேன். இந்த நம்பிக்கை எனக்கு கிடைத்ததற்கு உங்கள் முதல் கடிதம் மட்டும் தான் முழு காரணம்.



அன்புடன்,,

காலையில் துயில்பவன்

எழுதியவர் : (16-May-19, 9:03 pm)
பார்வை : 34

மேலே