செந்தமிழ் வெல்லும் உலகத்தையே

செந்தமிழ் வெல்லும்! செந்தமிழ் வெல்லும்!
செந்தமிழ் வெல்லும் உலகத்தையே!
செந்தமிழ் வெல்லும்! நிச்சயம் ஒரு நாள்
செந்தமிழ் வெல்லும் உலகத்தையே!
தெள்ளு தமிழ்ச் சுவை கண்டவர்கள்- தமிழ்
நல்ல அமுதென்று சொல்லிவைத்தார்- இதை
வள்ளுவர் கம்பரும் பாரதியும் உண்டு
சாகாப் புகழ் பேரு பெற்றுவிட்டார்!
சொல்லும் பொருளும் எழுத்தணியும்- உடன்
யாப்பும் ஐந்தான இலக்கணமும் - பெற்று
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை
ஐந்து நிலம் கண்டதன்னை தமிழ்!
வாளும் செங்கோலும் மணிமுடி கொண்ட- மூ
வேந்தர் புலவரின் தாள் பணிந்தார்- அவர்
நாளும் இயற்றும் இன்பத்தமிழ் கேட்டிட
தெய்வம் விளக்கேந்தி ஏவல் செய்யும்!
பூமி விளைய வெளிச்சத்தை வீசிடும்
ஞாயிறுக்கு தை பொங்கல் வைப்பார்- மக்கள்
சாமி என்று உழவுக்கு பயன்படும்
மாடு கன்றை போற்றிப் பொட்டு வைப்பார்.
விந்தை மிகுந்த தஞ்சை பெருங்கோவிலும்
மீனாட்சி கோவிலுக்கீடுள்ளதோ?- ஆகா!
இந்திய நாவாய் படையினில் ராசேந்திர
சோழனின் பெயரில் கப்பல் உண்டே!
கல்வி தொழில்கள் சிறந்துலகம் எங்கும்
பைந்தமிழ் நாட்டார் பரவி விட்டார்- அவர்
நல்லுள்ளம் ஒன்றிணைத்தால் போதுமே- வருங்
காலம் உலகைத் தமிழ் ஆளுமே!
தமிழ் தீக்குச்சி.