ஐந்திணை ஆசிரியம்

ஐந்திணை ஆசிரியம்

திணை: குறிஞ்சி
துறை: அலர் அறிவுறுத்தல்
கூற்று: தலைவி கூற்று

நேரிசை ஆசிரியப்பா
அம்ம வாழி தோழி! அருநிலைக்
கருங்கல் உச்சியில் கார்பெயல் பெய்திட
நெருங்கிய நீர்த்திரள் நெடுதுவீழ் அருவியின்
அச்சம் கொளவே அவரோ டாடினம்
முகம்வாய் மூடி முன்செலும் ஊரினுள்
கொடுநோய் பரவலின் கடுமைத்தே
அடுவேல் தலைவனோ டுற்ற உறவே!








திணை: முல்லை
துறை: தலைவன் பிரிவு நீட்டித்தவழி தலைமகள் நிலைகண்டு தோழி உரைத்தது.
கூற்று: தோழி கூற்று

நிலைமண்டில ஆசிரியப்பா
ஒண்மறை பைங்கார் ஓங்குநன் மாலை
முல்லைப் போதில் முழுதுண லின்றியே
முல்லையம் பாணி முரல்வதோர் அறுகால்
விண்முகில் பாவலன் விளைத்தநற் பாவிற்குப்
பண்முழாஅ இடிஇசை பகர்ந்திடும் சுதியினில்
தண்வழி மாருதம் தங்குரல் தந்திட
வெண்மாரி எனும் பாடல் வியப்பாய்க்; கேட்டு
ஆடின மாமயில் அழைத்தன வெண்புறா
கூடின குயிலினம் குழைந்தன கன்றெலாம்
ஓடின பூம்புனல் உறைந்தனர் காதலர்
வாடின செவ்விழி வாரார்கொல் தலைவரே!






திணை: மருதம்
துறை: பரத்தை இல்லிருந்து திரும்பிய தலைமகன் மீண்டும் செல்வனோ என அஞ்சிய தலைமகள் உரைத்தது
கூற்று: தலைவி கூற்று

நேரிசை ஆசிரியப்பா
திருமிகு விழவின் திரள்சேர் நெரிசலில்
ஒருமகன் இவனே உடன்தான் வரவே
கருவிழி பரத்தையர் கண்படு வலையினால்
நெருநல் மழையின் நீள்வயல் உழவர்
உழுமுனைக் கொழுவின் உறுதுயர் படுமோர்
புழுநிலை யுற்றே புலம்பும்
அழுநிலை பெற்றேன் அகநிலைத் தாமே.










திணை: நெய்தல்
துறை: பிரிவு ஆற்றாளாகிய தலைமகள் புலம்பியது.
கூற்று: தலைவி கூற்று

நிலைமண்டில ஆசிரியப்பா
நீருணா தன்னையே நெடிதுநாள் உட்கொளத்
தாரணி மார்பும் தளர்ந்தா கினவே
வேல்நிலை மாலை வைகலும் வருதலின்
மால்நிலை உற்றன மதர்த்தவென் மனனுமே
அலைபயில் இசையினை அருஞ்செவி மடுத்திட
துயில்கொள மறுத்தன துணைவிழி தானுமே
உயிர்வளி அடங்கிடும் ஒருநிலை உறுமுன்
புன்னையங் கானல் புதுநிலைக் குருகே
என்னை வருவர்கொல் இற்றைநாட் பொழுதே.









திணை: பாலை
துறை: செலவழுங்குவித்தல்.
கூற்று: தலைவன் கூற்று

நேரிசை ஆசிரியப்பா
வாரேன் யானே வன்பொருள் நசைஇ
சுவைபல கலந்துடன் துவைபல அடிசிலும்
இவைபல இனிதுடன் எதிர்நின் றூட்டும்
தண்புனல் வெண்கயல் கண்படு வலைஞரின்
மண்படு நிலத்துஉக் காங்கு
ஒண்விழி பெண்மகள் உறுதுயர் கண்டே.


ஆசிரியர் :கவித்தலம் கை.அறிவழகன்

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (14-Apr-20, 8:34 am)
பார்வை : 97

மேலே