தனிமையின் சூழலது

பிறப்பது வளர்வது
படிப்பது உழைப்பது
ஓய்வில் இருப்பது !
விரைந்து செல்வதில்
அதிவேகம் காட்டுகிறது
காற்றைவிடக் காலம் !
முடிந்த வாழ்க்கையை
வடித்துக் காட்டுகிறது
வழிந்திடும் இதயம் !
கணிக்க முடியாமல்
தணிக்கை செய்கிறது
முடிவினைநெஞ்சம் !
மறவாத அனுபவங்கள்
மனதெனும் கிடங்கில்
மலையளவுக் குவிகிறது !
பாடங்கள் கற்றதும்
படிப்பினைத் தந்ததும்
படங்களாய்த் தெரிகிறது !
அலசுகிறது ஆய்கிறது
அயராத உள்ளமது
நிறை குறைகளை !
செய்த தவறுகள்
நெய்த ஆடையில்
தெரியும் கிழிசல்கள் !
தவித்திடும் மனதை
தணிக்கவும் இயலாது
தவிர்க்கவும் முடியாது !
தள்ளாத அகவையது
தனிமனித நிலையது
தனிமையின் சூழலது !
பகுத்து அறிதலும்
வகுத்து வாழ்தலும்
வழியென வாழ்ந்தால்
நிறைந்த மனதும்
நீடித்த ஆயுளும்
நிலைத்து நிற்கும் !
பழனி குமார்