ஆசிரியர்

கலங்கரை விளக்காய் எந்தன்
கரைகாட்டிய கல்விமேதைகள்,
கழல் தொழுது பணிகின்றேன்.

விளக்கமாய் பாடம் சொல்லி
விளக்கை நீ ஏற்றி வைத்தாய்.
கணக்கும் விளங்க வைத்தாய், நல்ல
குணமும் மனத்துள் புழங்க விட்டாய்.
ஆங்கிலம் என்னில் விரிய வைத்தாய் .
இங்கிதம் இனிதாய் தெரிய வைத்தாய்.
விஞ்ஞானக் காட்டில் உலவ விட்டாய்.
அஞ்ஞான இருளை அகற்றி விட்டாய்.l

அன்று உனைக்கான பயந்த நான்.
இன்று உனை எண்ணி வியந்தேன்.

தவறு செய்த போது கண்டித்த நீ
தப்பு செய்த போது எனை தண்டித்தாய்.
நீ வசைபாடிய வேளையெல்லாம், அது
உன் வாழ்த்தென்று விளங்கவில்லை.
முத்தாபரணம் மேனியில் நான் சூட,
மூச்சடக்கி முத்துக் குளித்த மேதை நீ.

ஆழ்ந்தறியும் அறிவை நீ தந்து விட்டாய்.
ஆசானுனை அறிய யாரிடம் நான் கற்றறிவேன்?

சீர்மிகு ஆசிரியர் காட்டி வைத்த பாசத்தை,
சிந்தையில் மாணவர் சிதையாது பதித்து இருப்பார்.
இனிதான ஆசிரியர் பகவான்
இடம் மாற்றும் ஆணை கண்டு,
கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி, நம்
கண் முன்னே நிழலாடும் சாட்சி.

வருடலாய் வீசிய வசந்தக் காற்றில்,
நெருடலாய் சில நெருஞ்சி முட்கள்.
சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை,
கொல்லச் சொல்லிக் கெடுத்ததார்?

புத்தி தீட்டி பயிர் வளர்த்தார் ஆசிரியர்

விதை போட்டு வளர்த்துவிட்ட
குருமகனின்
சிதைச் சூட்டில் குளிர் காயம்
பேதையவன்,

கத்தி தீட்டி அவர் உயிர் எடுத்தான்.

சித்தம் தெளிய சீர்கொடுத்த
உத்தமனின் உயிர் சிதைக்க,
பாவம் என்ன செய்துவிட்டார்?
பாதகனே,
பாவம் என்ன செய்துவிட்டார்?

உந்தன் தகுதி அளந்து சொல்ல,
மண்ணில் தகுதி மாந்தர்க்கு ஏது?
பல்லறிவை பகிர்ந்தளித்த நீவிர்,
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

தீபன்
9443551706

எழுதியவர் : தீபன் (2-Sep-20, 8:36 pm)
Tanglish : aasiriyar
பார்வை : 243

மேலே