மழை எழுதிய கவிதை
மழை எழுதிய கவிதை
இரவு முழுவதும் மழை
பெய்து ஓய்ந்து விட்டது
விடியல் கூட
ஈரத்தில் நனைந்து
விடிகிறது
மூக்கில் பரவும் காரல்
மணத்துடன் மண்
சல சலவென்று
தெளிந்து ஓடும்
வாய்க்கால் அதை
இருபுறம் உரசிக்கொண்டு
உற்சாகமாய்
பச்சை புற்கள்
வெண்மை நிறத்துடன்
அங்கங்கு முளைத்திருக்கும்
காளான் கூட்டம்
பிறக்கும் போதே மழைக்கு
பயந்து குடைவிரித்து
மழையின் சரசத்தில்
சிலிர்த்த நிலையில்
பச்சை செடி கொடிகள்
வானத்தை வளைத்து
வண்ண கலவைகளாய்
வானவில்
அழகிய கவிதையை
எழுதிய மழை
விடியலில் இரசிக்க
இவைகளை
விட்டு சென்றதோ !