அவனும்… நானும்
அன்று தான் முதல் நாள் லாக்டவுன், ஒரு வித பதற்றம், பயத்தோடுதான் அலுவலகம் செல்ல தயாரானேன்.
கறுப்பு நிற உடையில், மாஸ் அணிந்து பாதி முகத்தை மறைத்து, நான் முதலில் பார்த்தது அந்த இருவிழிகளை மட்டும் தான்.
சார்.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றேன்… இல்லீங்க இப்போதான் வந்தேன் என்று பதில் வந்தது
.. அடுத்து பயணித்த அரைமணி நேரமும் ஒரு நீண்ட பெரிய மௌனம்…
அடுத்த சில நாட்கள் கழித்து உன்னை பார்த்தேன்…அப்போதும் உன் முகம் பரிச்சியமாகவில்லை..அதிகம் பழக்கமானது உன் விழிதான்.. நான் அதிகம் பார்த்ததும் அதைத்தான்…
சார்..வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றேன்.. இல்லீங்க இப்போத்தான் என்றாய்…அதே ஒற்றை வார்த்தை..
சார்.. இதுக்கு முன்னே வந்து இருக்கீங்களா என்றேன்..நீங்க மாஸ் போட்டு இருக்குறதாலே எனக்கு யாருனு தெரியல என்றேன்.. ஆமாங்க என்றாய்…
நீங்க புது ஆளுனு நினைச்சேன் என்றேன்..
…ஓ….என்ற ஒரு சத்தம் மட்டுமே வந்தது..
…அடுத்த அரை மணி நேரமும் நீண்ட மௌனம்…
அடுத்து அடுத்து பல முறை உன்னை பார்த்திருந்தாலும் பெரிதாக எதுவும் பேசியது இல்லை ..ஏன் என்றால், உன்னை விட அதிகம் பழக்கமானது உன் விழிகள் மட்டுமே…
ஒருவரை பிடித்துப்போக பெரிதாக காரணம் தேடினால் கிடைக்காது … அப்படி காரணத்தோடு பிடித்தால் அது நிலைக்காது.. அப்படி காரணமே இல்லாமல் ஒரு நாள் உன்னை பற்றி ஒரு சிறிய யோசனை
உன் பெயரைத் தவிர எதுவும் தெரியாத எனக்கு அந்த யோசனை ஏன் வந்தது என்று இன்னமும் புரிய வில்லை.
ஒருநாள் பயணத்தின் போது தயங்கியே உன்னிடம் கேட்டேன் .. சார் செல்ஃபி எடுக்கலாமா என்று ..சிறிய மௌத்திற்கு பிறகு எதற்கு என்ற பதில் வந்தது…
சும்மா மெமரீஸ்க்கு என்றேன் .. ம்ம்ம்ம் சரி.. என்றாய்
என் வீட்டின் ஒரு சாலையில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
மனதின் உள்ளுர ஒரு மகிழ்ச்சி… எனக்கு அனுப்புங்க என்றேன் …
ம்ம்ம்ம் என்ற பதில் வந்தது..
ஆனால் நீ அனுப்ப வில்லை பல முறை கேட்டேன் அது நல்ல இல்ல வேற எடுத்துக்கலாம் என்றாய்… அதிகமாக நாம் பேசத் தொடங்கியது அந்த இரவில் இருந்துதான்…
அடுத்தடுத்து பல முறை பயணம், பல நினைவுகள், பல பேச்சு, பல சிரிப்பு , பல அழுகை என அனைத்தும் கடந்து, எல்லாம் நீ ஆகிப்போனாய்.. நீயோ என் மலர் இல்லை…சூடிக்கொள்ளவும் நினைக்கவில்லை இருப்பினும் ஒரு அர்ப்ப ஆசை…எதிலும் ராசி இல்லாதவளுக்கு இதில் மட்டுமா யோகம் அடிக்கப்போகிறதா என்ன?
எதற்காக நான் மெமரீஸ் என்று சொன்னேனு தெரியால, ஆனால் அந்த மெமரீஸ் மட்டும்தான் இன்று வரை நினைவுகளில் நிரம்பி வழிகின்றன. மொத்தமும் ஒரு நாள் தொலைந்த பிறகு இன்று மிச்சமிருப்பது அந்த நினைவுகள் மட்டுமே…
அவனும் நானும்...
தொடர முடியா கதை