சேராக் காதல்

மிக பிடித்தமான ஒன்றை
கை நழுவிப் போக விட்டதென்ன!!
விதி செய்த சதி என்று கடந்து செல்ல,
காணமல் போனது கிடைத்து விட்டதே
என்ன செய்வது
இது அதை விட கொடுமையானதே.....!!

எத்தனையோ மலர்களை கடந்திருப்பேன்
ஆனால் மல்லிகை ஒன்றின் வாசனை மட்டும்
எப்போதும் மணம் வீசிக்கொண்டு இருக்கிறதே
ஒரு முறையேனும் காண்பேனோ என அதை
தேடி திரிந்த நாட்களை இன்று நான்
மிக மோசமாக வெறுக்கிறேன்

என்றைக்கோ மறந்து போய் இருந்தால்
கண்ணால் கண்டும் கையில் கிட்டாத ஒன்று
கண்ணாடி விம்பம் போல் இருந்து - அது
கண்களை ரணமாக்குவதை தவிர்த்திருக்கலாம்

எதோ ஒன்றை மனத்திருத்தி - அதை
இதுவென்று கற்பனை செய்து இரசித்துச்செல்ல
காலம் எனக்கு கொடுப்பனவு செய்யவில்லை
கிடைக்கும் என்றதை கனவிலே காட்டி
கண் விழித்த பின் கனவுதானது என
கன்னத்தில் அறைந்தாற் போல் சொல்லும்
கடவுளாம் படைத்த பாரினிலே - நான்
இன்னும் இருப்பது என்ன கொடுமை

எத்தனை துன்பம் தான் தாங்கி கொள்ளுவது
வீழும் என்றொரு மரத்தை வளர்த்து
அதில் காதல் மலர்களை எதிர்பார்த்து
காலங்கள் கடந்து சென்ற பின் - இன்னும்
காட்டாற்றில் சிக்குண்டு வேர்கள் எனும்
நினைவுகள் வானமும் கடலும் விம்பமாய்
விழுந்து எழுவதை ஏற்க முடியவில்லை

பழைய புகைப்படத்தை தேடி நான்
அதை எடுத்து பத்திரப்படுத்தி - என்
ஆழ நினைவுகளின் சின்னமாய் வைத்திருந்தேன்
இன்றதை கிழித்துவிடலாமோ என
மீண்டும் மீண்டும் பார்த்துத் தொலைகிறேன்

யாருக்கோ என தெரிந்திருந்தால் இது
இத்தனையும் எதற்காக - பதில் இல்லாத
கேள்விகள் பல நான் கேட்பதை இன்னமும்
நிறுத்தவில்லை............,

தொலைந்து போன ஒன்றைத் தேடுவதை
யாரேனும் எங்கேனும் செய்வதை
மீண்டும் அதுவோ இதுவோ என கலங்குவதை
மிகப்பிரம்மாண்டமான எண்ணச் சிதறல்களை
கற்பனைக் காற்றில் பறக்க விடுவதை
கவிதைக் குறிப்புகளில் செதுக்கி விடுவதை
இதயத் துடிப்புகளில் ஒளித்து வைப்பதை
கவுகளை உளறிக் காட்டுவதை - இதையெல்லாம்
தேடிய பொருள் கிடைத்த பின்னும்
அது நமக்கானதல்ல எனும்போது
மீண்டும் பிறக்கத் தோன்றுவதில் - சிறு
ஆசை இருக்கத்தான் செய்கிறது - ஆனாலும்
இது கடைசிப் பிறப்பாகி தொலைந்து போகவே
மனது வெம்மி அழுகிறது............!!

அத்தனை ஏமாற்றங்களையும் வெளிப்படுத்தாமல்
சின்னப் பிள்ளை போல் சிரித்துக்கொண்டு
ரணங்களை மறைத்து
என் வாழ்வு தொடர்கிறது.......................,

எழுதியவர் : இரா பாரதி (30-Sep-21, 12:11 pm)
சேர்த்தது : RBarathy
பார்வை : 125

மேலே