இரண்டாம் தேனிலவு
துள(சிங்கம்) சொன்ன பேச்சை கேட்காமல் அம்(புலி) அடம் பிடித்தவுடன் துளசிங்கத்திற்கு வந்ததே கோபம்." நீ யாரடி என் பேச்சை கேட்காமல் இருக்க. நான் உன்னை ஆயுசுக்கும் ஆளும் சிங்க புருஷன். என் பேரிலேயே தெரியுதில்ல என் கர்ஜனை" என்று கடிந்து கொண்டான். அம்புலி விட்டு கொடுக்காமல் " நீ சிங்கம் என்று வெளியில் சொன்னால் அசிங்கம். இந்த பெண்புலி அம்புலியை பற்றி இந்த வீடு மட்டும் இல்ல இந்த ஊரே அறியும். தெரியுமாய்யா? பேசாமல் நான் சொன்ன மாதிரி உங்க அண்ணன்கிட்ட சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டு விருட்டென சமயலறைக்கு சென்றுவிட்டாள்.
துளசிங்கம் ஆ ஆ ஆ என்று அலறியபடி தூக்கத்திலிருந்து முழித்து கொண்டான். " என்னடா இந்த சிங்கம் இப்படி கர்ஜனை செய்யாதே என்று கனவில் கூட நினைத்தேன். இப்போ பார்த்தா கனவே தான்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் படுத்துகொண்டான். நல்லவேளை அம்புலி விழித்துக்கொள்ளவில்லை. கனவில் நடந்தது தெரிந்தால் என்னை சும்மா விடமாட்டாள் என்று நினைத்தபடி மீண்டும் தூக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை அவனது நண்பன் சிலம்பரசன் வீட்டுக்கு வந்தான். துளசிங்கம் கேட்டான் " என்னப்பா சிலம்பாட்டம் எப்படி நடக்குது வீட்டில்" சிலம்பரசன் கொஞ்சம் சோகமாக " கண்ணகியிடம் சிலம்பும் செல்லாது என் புலம்பலும் செல்லாது. அவள் வைத்தது தான் சட்டம். என்ன செய்வது துளசிங்கம், நமக்கு வந்து வாச்சவங்க மதுரை மீனாட்சியின் அவதாரங்கள் தானே". உடனே துளசிங்கம் " சிலம்பு, கொஞ்சம் அடக்கி வாசிப்பா. கடைக்கு காய்கறி வாங்க போனவ எப்ப வேணாலும் வரலாம்" என்று குரலை தாழ்த்தி சொன்னான். இருவருக்குமே திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது.இரண்டு பேருக்கும் இதுவரை குழந்தைகள் இல்லை. ஏனெனில் அம்புலியும் கண்ணகியும் நெருங்கிய தோழிகள். அவர்கள் மூலமாகத்தான் துளசிங்கமும் சிலம்பரசனும் நண்பர்கள் ஆனார்கள். தோழிகள் இரண்டு பெரும் எப்போதும் அவர்களிருவருக்கே காதில் கேட்காத மாதிரி ஏதாவது ரகசியம் பேசி கொள்வார்கள். அந்த ரகசிய பேச்சுகளின் அடிப்படையில் தான் ஐந்து வருடம் வரை பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூடாது என்கிற ரகசிய தீர்மானம். இதனால் துளசிங்கமும் சிலம்பரசனும் காலை மாலை போல இரவிலும் கைக்கட்டுடன் (காயம் எல்லாம் ஒன்றும் இல்லை, இருவருக்கும் கைகள் இருந்தும் இரவில் கட்டிபோடப்பட்ட நிலை). நண்பர்கள் இருவரும் எப்போது தான் இந்த 5 வருட probation period முடியும் என்று ஆவலுடன் ஆனால் கூவமுடியாமல் பரிதவிப்புடன் காத்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் கொண்டாடும் திருவிழா வருவது போல ஐந்து வருடங்கள் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருந்தது.
ஐந்து வருடங்கள் நிறைவு அடைந்ததை கொண்டாடுவதற்கு துளசிங்கமும் சிலம்பும் அவரவர் மீனாட்சி ராஜ்யத்திடம் கெஞ்சி கெஞ்சி அதை கொண்டாட அனுமதியும் பெற்றார்கள். அனுமதி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இரண்டு மீனாட்சிகளும் இரண்டு நிபந்தனை போட்டார்கள். அவை என்ன? முதலாவது , குழைந்தை பெற இன்ப விழாவை இன்னுமொரு தேனிலவு பயணம் ஊட்டிக்கு சென்று கொண்டாட வேண்டும். இரண்டாவது மீனாட்சிகளின் அழகை சிறிதும் குலைக்காமல் கவனமாக செயல் பட வேண்டும். முதல் நிபந்தனை இரண்டு பயல்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால் இரண்டாவது நிபந்தனை கொஞ்சம் கடுமையாகவே தோன்றியது. அந்த ஒரு நேரத்திலாவது இந்த இரு வீரர்கள் அவர்களது மனைவிகளின் மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர். ஆனால் இப்படி ஒரு எதிர்பாராத நிபந்தனையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இரண்டாம் நிபந்தனை பற்றி விவாதம் செய்ய துளசிங்கமும் சிலம்பரசனும் ரகசியமாக போனில் உரையாடி ஒரு திட்டம் தீட்டினார்கள். ஊட்டியில் மூன்று நாள் தேனிலவில் மட்டும் அவர்களுக்கு முழு உரிமையை கொடுக்கவேண்டும் என்பது தான். இதை பவ்யமாக அவர்களது மனைவிமாரிடம் சொன்னார்கள் . இதன் பிறகு அம்பிலியும் கண்ணகியும் இதுகுறித்து நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி " சரி போனால் போகட்டும், அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தானே" என்று கணவன்மார்களுக்கு பச்சை விளக்கு காண்பித்தார்கள்.
தேனிலவு நாட்களும் வந்தது. அப்புறம் என்ன. இரண்டு தம்பதியினர் சென்றனர் ஊட்டி; பகலில் ஊட்டியின்
பியூட்டி; மதியம் கொஞ்சம் ரெஸ்ட் டியூட்டி; மூன்று இரவுகள் லூட்டி. மூன்று நாட்களுக்கு பின் குதூகலமாக ஊர் திரும்பினர். அன்று மதியம் அம்பிலியும் கண்ணகியும் போனில் ஒரு மணி நேரம் உல்லாசமாக உற்சாகத்துடன் உரையாடினார்கள். இருவரும் தமக்கு கிட்டிய இன்ப அதிர்ச்சிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இருவருக்குமே இரண்டாவது தேனிலவு அருமையான சொர்க்கமாக அமைந்தது என்று சொக்கி போனார்கள். அவர்கள் இருவரும் எதிர்பாராத இந்த இன்ப வேதனையால், அந்த இருவருமே தமது கணவர்களுக்கு அன்று இரவே இரண்டாவது நிபந்தனை முதல் குழந்தை பெரும் வரை ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தார்கள். கேட்க வேண்டுமா துளசிங்கத்திற்கும் சிலம்பரசனுக்கும். காலை மாலை அலுவலகத்தில் உழைத்துவிட்டு இரவிலும் மகிழ்ச்சியுடன் உழைத்தனர். அம்பிலியும் கண்ணகியும் இதற்கு நன்கு ஒத்துழைத்தனர்.
அலுவலகத்தில் உழைத்த பலன் ஒரே வருடத்தில் இருவருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. வீட்டில் ஆற்றிய உன்னத சேவையால் சரியான நேரத்தில் இருவருக்கும் தந்தை என்று பதவி உயர்வும் கிடைத்தது. இப்போதெல்லாம் அம்பிலியும் கண்ணகியும் அவர்களது கணவர்களை அடக்கும் முறையை கையாளவில்லை. அதே நேரத்தில் கணவன்மார்களும் அவர்களது மனைவிகளை அடக்கும் எண்ணமும் கொள்ளவில்லை. இரு தம்பதியினரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, தத்தம் குழந்தைகளுக்கு நல்ல தாய்மார்களாகவும், அக்கம்பக்கத்தில் சமுதாயத்திலும் அருமையான தம்பதிகள் என்று பெயரும் பெற்றனர். பின்னர் இரு தம்பதிகளும் இரண்டாவது மூன்றாவது குழந்தையை பெற்றார்களா இல்லையா என்று நீங்கள் யோசிப்பீர்கள். அப்படியே யோசித்து கொண்டே இருங்கள். எனக்கும் அது பற்றிய விவரம் ஏதும் தெரியாது. ஆனால் ஒன்று அவர்கள் மூன்றாவது முறை தேனிலவுக்கு மட்டும் செல்லவில்லை என்ற விஷயம் மட்டும் என் காதில் விழுந்தது.
சரி இப்போ வாங்க, நாம சேர்ந்து தேனிலவுக்கு போகலாம். அட என்னங்க, இப்படி பயந்து அதிர்ச்சி ஆயிட்டிங்க? அந்த காலத்தில் ஜெமினி கணேசன் வைஜயந்திமாலா நடித்த தேனிலவு திரை படத்துக்கு தான் போகலாமா என்று கேட்டேன்.
" பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவே பறந்து செல்ல வா "
பார்த்தீங்களா, மறுபடியும் முகத்தை சுளிக்கிறீர்கள்.இந்த வரிகள் தேனிலவு படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் தாங்க. இப்போ கவலை பயம் விட்டதா?
" ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலைமேவும் வர்ணஜாலம் கொண்டகோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி"??????
ஆனந்த ராம்