கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும் – அறநெறிச்சாரம் 31
இன்னிசை வெண்பா
வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. 31
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
நாள்தோறும் கற்கள் நீரினுள்ளேயே கிடந்தாலும் கல்லுக்கு, மென்மையடைதல் மிகவும் அரிதான இயலாத செயலாகும்.
அதுபோல நல்ல குடும்பத்தில் பிறக்காத கயவர்களின் மனமானது, நாள் தோறும் நல்ல அறநூல்களைக் கேட்டாலும் கல்லைக் காட்டிலும் திண்ணியதாகவும், கடினமானதுமாகவே இருக்கும் எனப்படுகிறது.
கருத்து:
எனவே, நல்ல அறநூல்களைக் கேட்டு, நல்லதையே நினைத்து நல்லவற்றையே செய்யும் மனப்பக்குவம் அனைவர்க்கும் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.