யாவரெலாம் அஞ்சார் முரண்மறலி தும்பை முடிசூடி னும் - நீதிநெறி விளக்கம் 42

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
புலனொருங்கப் பொய்யொழிந் தாரும் - கொலைஞாட்பின்
மொ’ய்’ம்புடை வீரரும் அஞ்சார் முரண்மறலி
தும்பை முடிசூடி னும் 42

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

மங்கல நாண் இழந்த கற்புடைய பெண்களும், மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலன்களுந் தம் வசப்பட பொய்ம்மையினின்று நீங்கினோரும், யுத்தகளத்தில் வலிமையுடைய வீரர்களும் வலிமை மிக்க நமன் தும்பைப்பூ மாலையைத் தம் முடியின் அணிந்து எதிர்ப்பினும் தமது நிலை கலங்கார்.

விளக்கம்:

தும்பை மாலை - போர் செய்தற்கு அணியும் மாலை.

மறலி - மறத்தொழில் (கொடுந்தொழில்: அஃதாவது கொல்லுதல்) செய்வதால் மறலி எனப்பட்டான்.

கணவரை இழந்து கற்புநிலை தவறாத பெண்கள் இயல்பாகவே தம் வாழ்நாளில் வெறுப்புற்றிருப்பர்; அன்னார் தம் கணவர் இருக்கும் பொழுது தாம் வாழ்க்கையில் இன்பமாய்க் காலங் கழித்ததும், அன்னார் இறந்தபின் தம் உலகவாழ்க்கை தமக்கு எப்போதும் மகிழ்ச்சியற்றிருப்பதுங் கண்டு இறப்புக்கு ஆயத்தமாயிருப்பர்.

ஐம்புலன் வென்ற துறவிகட்கு உலகப்பற்றே யிராதாதலின், அவர்களும் இறப்பை வெறார்.

வீரர் வீரருலகு விரும்பிப் போரில் தம் பகைவருடன் எதிர்த்து நிற்குங்கால் தம் உயிரைத் துரும்பாக மதித்துத் தமக்கு அல்லது எதிரிக்கு வெற்றி காணுமளவும் வீரமுடன் சண்டை செய்வர். தாம் தோற்க நேர்ந்த பொழுது மானங்காப்பான் தம் இன்னுயிரை அக்கொலைக் களத்திலேயே கூற்றுவனிடம் ஒப்படைப்பர்.

கருத்து:

கற்புடைய கைம்பெண்களும், ஐம்புலன் வென்ற துறவிகளும் அஞ்சாநெஞ்சு படைத்த போர் வீரர்களும் இறத்தற்கும் அஞ்சாது தம் மானத்தினைக் காப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே