நல்நடத்தைக்கு காரணிகளான எட்டுப் பண்புகள் - ஆசாரக் கோவை 1
பஃறொடை வெண்பா
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ(டு)
ஒப்புர(வு) ஆற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1
- ஆசாரக் கோவை
பொருளுரை:
1. நமக்குப் பிறர் செய்த நன்மைகளுக்கு நன்றி மறவாதிருத்தல்,
2. பிறர் செய்த பிழை பொறுத்தல்,
3. இனிமையான சொற்களைப் பேசுதல்,
4. எல்லா உயிர்க்கும் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருத்தல்,
5. நிறைந்த கல்வி,
6. ஒழுக்கம் அறிந்து வாழ்தல்,
7. அறிவு உடைமை,
8. நல்ல இயல்புள்ளவர்களுடன் நட்புச் செய்தல்
ஆகிய எட்டுப் பண்புகளும் ஒருவரின் நல்நடத்தை க்கு அறிஞர்களால் சொல்லப்பட்ட காரணிகளாகும்.
ஒப்புரவு - பெரியோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஞானம்.
இச்செய்யுள் பஃறொடை இன்னிசை வெண்பா ஆகும். வெண்பா இலக்கணத்துடன் 5 முதல் 12 அடிகள் உள்ள வெண்பா ’பஃறொடை வெண்பா' எனப்படும்.