நன்மை யிலாளர் தொடர்பின்னா - இன்னா நாற்பது 32

இன்னிசை வெண்பா

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். 32

- இன்னா நாற்பது

பொருளுரை:

ஒருவன் மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது தன்னைத்தானே காத்துக் கொள்ளாது நடத்தல் மிகவுந் துன்பமாகும்;

முன்னே சொல்லாமல் பின்னிருந்து பழித்துரைக்கும் புறங்கூற்று துன்பமாகும்;

நற்குணமில்லாதவரது நட்பு துன்பமாகும்;

அவ்வாறே, நற்குலத்தில் பிறந்த பழம்பெருமையுடைய நல்லோர் கெடுதல் துன்பமாகும்.

விளக்கம்: தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். தொன்மையுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே