தேடினேன் வந்தது
கரு ஒன்று மனதில் தோன்றும்
கவிதையாக்க மனம் விரும்பும்
புரிதல் இல்லா செய்தியிலே
புலமைக்கான அறிவு விரும்பும்
புது உருக்கு நெய்போலே
புத்துணர்வு பெருகி வரும்
பதுமையின் சுகம்போலே
புதுமை எல்லாம் பேரின்பம் தானே.
பின்னிரவின் அமைதியிலே
மின்விளக்கின் ஒளியிலே
கணினியின் காண் திரையிலே
கண்டுவிடத் துடிக்கும் துடிப்பிலே
வளைத்து எடுக்கும் ஆவலுடன் நாடியே
வலைத்தளத்தில் வேட்கையுடன் தேடியே
சொல் அரிதாய் தேடியவை காணக்காண
தொல் இனிதாய் நெஞ்சம் களிக்கும்
சுடர்விழிகள் இரண்டும் நன்கு பூக்கும்
பாடங்கள் பதிவுக்குத் தொகுத்து வரும்
பரிந்து வந்ததில் தெரிந்தெடுப்பேன் -மனம்
பூரிப்பேன் என்னை மறந்து,
நலம் பாடி விடியல் வரும்.
குன்றத்தில் வைக்கத்தக்கது என்றே, மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள செய்திகள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
நன்றென்றாலும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;
ஆதலால்
தேடுவது என்பதே முடிவற்றது
தேடுவேன் இனியும் தேடுவேன்
முடியும் வரை தேடுவேன்.