கண்களின் கதைகள்
கண்கள் சொல்லும் கதைகள்.
*********
விந்தைகள் செய்திடும்
விழிகள் இரண்டும்/
பந்தென உருண்டு
பார்வையில் ஒன்றுமே !
எண்சாண் உடலின்
எழில்மிகு வாசல்/
விண்ணையும் மண்ணையும்
விளக்கிடும் விளக்கே!
இதயம் எழுந்திடும்
இனியநல் அன்பினை /
உதித்திடும் காதலை
உணர்த்திடும் விழிகளே!
வரையறை இல்லா
வாழ்வினில் நேசம் /
கரைமீறும் வெள்ளமாய்க்
கண்களில் பாயுமே !
கண்கள் சொல்லிடும்
கதைகளே வாழும்/
எண்ணில் அடங்கா
இடர்களும் தீருமே!
-யாதுமறியான்.

