பெரிதாள் பவனே பெரிது அறியும் - பழமொழி நானூறு 82
நேரிசை வெண்பா
பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்
பெரிதாள் பவனே பெரிது. 82
- பழமொழி நானூறு
பொருளுரை:
வில்லைப்போன்ற புருவத்தின் கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்!
நன்மையையும், தீமையையும் நிரல்படப் புனைந்து மருங்கு இருந்தார் சொற்களால் கூறவும் வேண்டுமோ? எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும் அறிவான்.
கருத்து:
கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்து நடப்பான்.
விளக்கம்:
சொல் பெய்து எனவே சொல்லுஞ் சொல் பயனின்றாய் முடியுமென்பதாம்.
'பெரிதுஆள்பவனே பெரிது அறியும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.