வந்தது கொரோன

வந்தது கொரோனா
இது நடந்தது 2020ம் ஆண்டு
எனக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மார்ச் மாதம் 2ம்தேதி( 2020) டாக்டர் காமாட்சி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நடந்தது. அப்போது என்கூட இருந்து என்மகனும், தம்பி யும் கவனித்து வந்தனர், ஆபரேஷன் செய்த டாக்டர் நான் இன்னும் ஒரு மாதத்திற்கு நீண்ட பயணம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தார். நாங்கள் ஏற்கனவே புக் செய்து இருந்த மார்ச் 23 ம்தேதி அமெரிக்கா புறப்படுவதற்கான டிக்கட்டை டாக்டரின் அட்வைஸ்படி கேன்சல் செய்து மறுபடியும் எப்போது புக் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் நம்நாட்டில் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. அதனால் மார்ச் 24 ம் தேதியிலிருந்து லாக் டௌன் என்ற பூரண ஊரடங்கு அமுலாக்கப்பட்டது தமிழ்நாட்டில். இதுவரையில் இல்லாதபடி மக்களை முகமூடி அணியவும் சோஷல் டிஸ்டன்ஸ் என்ற மக்களுக்கு மக்கள் பொது இடங்களில் 6 அடி சமூக இடைவெளி விட்டு இருக்கவும் வேண்டும் என்றும், இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது அரசாங்கம். வீதிகளில் பஸ் ஓடுவது நிறுத்தப்பட்டது. கடை கண்ணிகள், ஒட்டல்கள் எல்லாம் மூடப்பட்டன. எப்பொழுதும் நெருக்கம் நிறைந்த சென்னை நகரின் வீதிகள் விரிச்சோடின.
சுத்தம் சோறு போட்டு விடுமா என்று கேட்டு ரோட்டை அசுத்தப்படுத்துவதையே தங்கள் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட பலரும் சுத்தத்தை ப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள். தெரு எங்கிலும் குப்பை போடும் மக்கள் சுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து தெருவில் மருந்து அடிக்கப்படுவதைப் பார்த்து முதன்முறையாக ஆனந்தப்பட்டனர். அவர்களும் வேப்பிலை, மஞ்சள் தண்ணீரை தங்கள் தெருக்களின் இருபுறமும் தாராளமாக தெளித்து மகிழ்ந்தனர். நமது முன்னோர்கள், பெரியவர்கள் எல்லாம் அன்றே சொன்னார்கள் மடி என்ற பெயரில் சுத்தமாக இருக்க வேண்டும் என்று. அதைக் கேலி செய்தோம். இன்று அதை செய்ய ஆரம்பிக்கிறோம் என்றார். ஒரு கிழவர் பெருமையுடன். எல்லோரும் கையை சோப்புப்போட்டுக்கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் அதை எப்படி செய்வதை என்பதை பலரும் பார்த்து மகிழும் வண்ணம்நடனமாகவும், அபிநயமாகவும் ஆடியும், பாடியும் காட்டி, கொரோனா திகிலிலிருந்த திசை திருப்பி மக்களை பரவசப்படுத்தினர். சீனாவிலிருந்து இது வந்தபடியால் நிறைய நாள் இது நீடிக்காது என்பதைப் பொய்ப்பித்து டிவி சீரியல் போல இதற்கு ஒரு முடிவே கிடையாதோ என்று எல்லோரையும் கதிகலங்கச் செய்துவிட்டது.
அதற்குள் இதற்கான மருந்தைத்தேடி அலைந்து, எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல பலரும் கப சுர கசப்பு மருந்தை கொரோனாவின்மீது இருந்த பயத்தில் காபி குடிப்பதுபோல் கப கப வென்று குடிக்க ஆரம்பித்தனர். சிலர் ஹோமியோபதி மருந்துகளையும், அல்லோபதி மருந்துகளையைம் எதற்கும்இருக்கட்டும் என்று மூன்று வேளை பூஜை பிரசாத தீர்த்தம் போல் சாப்பிட்டார்கள். ஹோமியோபதி, அல்லோபதி மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாதவர்கள் திருப்தி வெங்கடாசலபதியை நம்பி ஒரு மஞ்சள் துணியில் ஒரு பத்து ரூபாயை முடித்து வைத்து திருப்பதி போகிறவர்களிடம் கொடுத்து உண்டியலில் போடச்சொல்லலாம் என்று நீண்ட நாள் காத்து யாரும் அங்கே போகாமையால் வீட்டில் இருந்த உண்டியலிலேயே வேண்டும்போது எடுத்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் போட்டனர்.

பள்ளிகளும், கல்லூரிகளும் , சினிமாக் கொட்டகைகளும் மூடப்பட்டன. TV , கம்ப்யூட்டர் இவை மாத்திரம் இல்லாது இருந்தால் மக்கள் சுமார் 100 ஆண்டுகள் பின்னே தள்ளப்பட்டு இருப்பர். வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் வீட்டிற்கு வர இயலாததால் ஒரே நொடியில் இந்தியர்கள் பலரும் அமெரிக்கர்களாயினர். இக்கால கட்டத்தில் அனைத்து வேலைகளையைம் அவ்வீட்டினரே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாத்திரங்கள் தேய்த்தல், வீட்டை கூட்டிப் பெருக்குதல் போன்ற அன்றாட வேலைகளையும் அவ்வீட்டினரே செய்ய வேண்டியது ஆயிற்று. சமையலுக்கு ஆள் வைத்து இருந்தவர்கள் வரமுடியாததால் அந்த வீட்டுப் பெண்களே சமைக்க வேண்டியதாயிற்று. எல்லோரும் முகமூடி போட்டுக்கொண்டதால் பலரை அடையாளம் தெரியவே இல்லை. இந்த முகமூடி போட்டுக்கொண்டு ரோடில் போவோர் வருவோர்களைத்தாக்கி கொள்ளை அடித்தால் என்ன செய்வது என்ற பயம், யாரும் ரோடில் நடக்கக்கூடாது என்ற உத்திரவால் நீங்கியது. சில சமயம் நம்ம வீட்டு ஆட்களையே அவர்கள் குரலிலிருந்துதான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. இந்த சமயத்தில் நடந்த கல்யாணங்கள்தான் நம் நாட்டிலேயே மிகச்சிக்கனமாக நடந்த மத்திய தர மக்கள் கல்யாணங்கள் ஆகும். அதிலே பையனும், பெண்ணும் முகமூடி அணிந்தபடி செய்து கொண்ட கல்யாணம் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கை கழுவிக்கொண்டபின் எதையும் தொடாமலிருக்க ஒவ்வொருவரும் படாத பாடு படுவதை நினைத்து சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. ஒருவர் வீட்டுக்குள்ளே நுழையும்போதே வாங்க வாங்க என்றழைக்கும் நம் பண்பாட்டுக்கு குட்பை கொடுத்து, வெளியிலேயே “கொஞ்சம் நில்லுங்கள். சானிடைசர் கொண்டு வந்து உங்கள் கையில் ஊற்றுகிறேன், அதால் கையை கழுவிக்கொண்டு பிறகு உள்ளே வாருங்கள்” என்று நம் பண்பாட்டை மீறி கேட்டுக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. செல்யூட் அடித்து கட்டிப்பிடித்து ஹக் செய்வதுதான் பெரிய மனுஷத்தனம் என்று சொல்லியும் செய்தும் வந்தவர்கள், கைகூப்பி வணக்கத்தைக்கேலி செய்தவர்கள் எல்லாம் இன்று இந்தியன்ஸ்டைலில் வணக்கம் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

மஞ்சளின் மகிமையையும், வேப்பிலையின் மகத்துவத்தையும் வெளிப்படுத்திய கொரோனாவுக்கு நம் வாழ்த்துக்கள். கைகழுவும் முக்கியத்தை உணர்ந்த பலரும் எந்நேரமும் சோப்பைப்போட்டுக் கையைக் கழுவோ கழுவு என்று கழுவியதில் பலரிடைய கைரேகைகள் காணாமற் போய்விட்டபடியால் அவர்கள் பழைய ஆதார் கார்டை பல அறிவு ஜீவிகள் நம் நாட்டில் பொறுமை செத்துவிட்டது என்று கண்டு பிடித்து அந்த அவார்டுகளினால் கிடைக்கக்கூடிய பலன்களை எல்லாம் அனுபவித்து விட்டுத் திருப்பித்தந்தார்களே அந்த மாதிரி தம் ஆதார் கார்டுகளை திருப்பித்தந்து புது ஆதார் கார்டு கேட்டு வாங்கிக் கொண்டதாகக் கேள்வி.
அதில் ரோடில் எதற்கும் கவலைப்படாத நடராஜன்களை போலீஸ் தடுத்தி நிறுத்தி அவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காட்சி அந்த நேரத்தில் சிறந்த நகைச்சுவைக் காட்சியாக இருந்தது. அதில் பல வயதானவர்களும் உட்கார்ந்து பிறகு எழுந்து நிற்க படும் அவஸ்தை சிறப்பாகவும், சிரிப்பாகவும் இருந்தது.
அதில் ஒருஇளைஞன் தன்னை சினிமா ஹீரோவாகப் பாவித்து போலீசாரிடம் “ இது பொதுமக்கள்ரோடு. இங்கே நான் நிற்பதையும் நடப்பதையும் தடை செய்ய நீ யாரு? நீ இந்தியப்பிரசிடென்டோட மாமனா? மச்சானா? நீ மாத்திரம் நடு ரோடுல் நிற்கிறாயே. ஏழைக்கு ஒரு சட்டம். என்னைப்போல பாழைக்கு ஒரு சட்டமா? என்று வீர (பாண்டிய கட்டபொம்மன்) வசனத்தை அடிக்கவே அந்த போலீஸ் அவனை லத்தியால் லேசாக இரண்டு முறை தட்டவும், அந்த ரோட்சைட் ஹீரோ zero வாகிப்போய். எண்சாண் உடம்பும் ஒண்ணரைசாண் உடம்பாக குறுகி பிறகு பெட்டிப்பாம்பாய் அடங்கி கைபொத்தி வாய் புதைத்து போலீஷ் ஸ்டேஷனில் அமர்ந்து போலீசிடம் கெஞ்சிய சரணாகதிப்படலம் சிரிப்பையும், சிலிர்ப்பையும் ஒன்று சேர வரவழைத்தது. .

TV பார்த்தவர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காகவும் இருந்தது. கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல அவ்வப்போது சொல்லிக்கொண்டு வந்த கொரோனா ஸ்கோர் ஒரு த்ரில்லர் காட்சியாக அமைந்தது. நமக்குத்தெரிந்தவர்கள் யாரும் அதில் இல்லை என்ற நம்பிக்கையில் அந்த ஸ்கோரைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். நம் பெயர் அதில் இல்லை என்று தெரிந்த உடன் ஒரு நிம்மதி.
கொரோனா என்ற பௌலர் கணக்கில்லாத ஓவர்களை வீசி க்ளீன் பௌல் ட் ஆனவர்கள் எத்தனை பேர், இஞ்சர்ட்( காயப்பட்டோர் …… எத்தனை பேர் போன்ற ஸ்கோரை அவ்வப்பொழுது அப்டேட் செய்து கொண்டே வந்தன சில டிவி சேனல்கள்.

வழக்கமாக ஒரு சின்ன ஜலதோஷம் பிடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கிலியில் உலகிலுள்ள அத்தனை தெய்வங்களையும் பிரார்த்தித்தபடி இருந்தனர். ஆனால் இதற்காக யாரும் கோவில் குளம் என்று தேடி போக முடியாது ஆதலால் அவரவர்கள் மனதுக்குள்ளேயே பிரார்த்தனை செய்த காட்சி அதி அற்புதமானது. எப்பேர்ப்பட்ட சூரனும், வீரனும், கோழைபோல் பயந்து சமூக நீதியை நிலை நாட்டிய கொரோனாவை போற்றுவதா இல்லைத் தூற்றுவதா என்று புரியாமல் பலரும் தவித்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் இறந்தவர்களை ஒருவரையும் கிட்டே வந்து பார்க்கக் கூடாது என்ற தடை உத்தரவு சோகத்தின் உச்ச கட்டம். அதைவிட கொடுமையான காட்சி இறந்த உடல்களை குழிக்குள் குப்பை கொட்டி மூடுவதுபோல் போட்டது. அந்தக்காட்சி TV யில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டபோது பல பெரியவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டி தங்கள் குழந்தைகளின் கண்களையும் மூடிய திகில் காட்சி சோகத்தின் உச்ச கட்டம். எனக்குத் தெரிந்த அடுத்த flat மூதாட்டி எப்போதும் “ சீக்கிரமாக என்னைக் கொண்டு போ கொண்டு போ” என்று ஓயாமல் பிரார்த்தனை செய்யும் பாட்டி, “ பகவானே இந்த கொரோனா காலத்துலே என் உயிர் போகப்படாது.அப்புறம் நான் அனாதைப் பிணமாக சாக வேண்டிவரும். அதுவும் சடங்கு சம்பிரதாயங்கள், சொந்த பந்தங்கள் எதுவுமில்லாது என்னை எரித்தால் என் நெஞ்சு வேகாது. அதனாலே இந்த கொரோனா ஓயற வரையிலும் எனக்கு சாவைத்தந்து விடாதே” என்று உருக்கமாக வேண்டிக்கொள்ள அவர் வீட்டுப்பையன் அதை facebook ல் போட்டு அனைவருயும் அந்த 92 வயது கெழவிக்கு “ஒன்றும் ஆகக் கூடாது என்று எலலோரும் வேண்டுக்கொள்ளுங்கள்” என்று ஒரு உருக்கமான போஸ்ட் போட்டதில் , அந்த செய்தி வைரலாகப் பரவிற்று. அதை அறிந்து அந்த பாட்டி மிகவும் சந்தோஷப்பட்டார் என்று கேள்வி.

ஆபீசுக்கும் யாரும் வரவேண்டாம். வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்று அரசு சொல்லிவிட்டதால் பல அரசு ஊழியர்களும் முன்பு வேலை செய்யாமல் இருக்க ஆபீசுக்குப்போவோம். இப்போ அந்த அவசியமும் இல்லை என்று சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, இவர்கள் ஆபீசில் வேலை செய்யும் குட்டு தங்கள் மனைவிமார்களுக்குத் தெரிந்து விடப் போகிறதே என்ற கவலையில் வீட்டில் நிறைய ஆபீஸ் வேலை இருப்பது போல பாவ்லா காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அது தவிர அவ்வப்பொழுது வீட்டு வேலையில் மனைவிக்கு ஒத்தாசை செய்யவும், குழந்தையைப்பார்த்துக்கொள்ளவும், வேலைக்காரி வராததால் அந்த எக்ஸ்ட்ரா வேலையையும் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஆபீசே தேவலை என்று பலரும் முணுமுணுப்பது எல்லோர் காதிலும் விழுந்தது.

வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஒரு புதுவிதமான முறை பழக்கத்துக்கு வந்தது. ஒரு ஆபீசர் தன் கீழ் வேலை செய்யும் கிளர்க்கை போனில்கூப்பிட கிளர்க்கின் மனைவி போனை எடுத்து தன் கணவர் சமையலில் பிசியாக இருப்பதாகச் சொல்லவே ஆபீசர் கோபமடைந்து அவரை நான் கூப்பிட்டேனென்று சொல்லி என்னிடம் பேசச்சொல்லுங கள் என்றார். ஆனால் கிளார்க்கிடமிருந்து பதில் வராமல் போகவே கோபமடைந்து அவர் சற்று நேரத்தில் கிளார்க்கை மறுபடியும் கூப்பிடவே இம்முறையும் கிளார்க்கின் மனைவி போனை எடுக்க, மிகுந்த கடுப்புடன் ஆபீசர் ஏன் கிளார்க் தன்னிடம் பேசவில்லை என்று கேட்டதற்கு, கிளார்க்கின் மனைவி “சார், உங்களிடம்பேச அவர்போன் செய்த போது உங்கள் மனைவி போனை எடுத்து நீங்கள் பிசியாக ஒட்டடை அடித்துக்கொண்டு இருப்பதாகவும் பிறகு கூப்பிட்டு பேசலாம் என்று சொன்னார் என று சொல்லவே ஆபீசர் வாயடைத்துப்போனார்.
இப்படி பல சம்பவங்கள்.
இதில் வீட்டில் உட்கார்ந்தபடியே எதையாவது கொரித்த வண்ணம் இருந்ததால் பல ஆண்கள் தங்கள் பேண்டின் சுற்றளவு அதிகரித்து டெய்லர்கள் யாரும் இல்லாததால் பேண்டின் சைஸை மாற்ற முடியாமல் போனதாலும். வேட்டியிலேயே காலம் கழித்தனர். டயட் டிலிருந்த பலரும் பகல்பூராவம் விடாப்பிடியாக எதையாவது வாய் ஓயாமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்த படியால் எடை எகிற ஆரம்பித்தது. ஒரு கார்டூனில் பார்த்தது போல ஒரு சிலர் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்ததாகவும், ஒரு சிலர் வாயிற்கதவை இடித்து வெளியே வந்ததாகவும் கேள்வி.

சில கணவன் மனைவிகளுக்கிடையே என்றும் நடக்கும் சிறு சிறு சண்டைகள எல்லாம் பெரிய சண்டைகளாக மாறி டைவர்ஸ் வரையிலும் போய் லாக் டௌன் காரணமாக வெளியே போக முடியாத தால் நாக் டௌனில் முடிந்தது. இந்த நேரத்தில் தன் ஆபீஸ் பாஸே பரவாயில்லை என்று எண்ணும் வகையில் மனைவிகளின் பாசிஸம் தாங்காமல், லீவும்போட முடியாமல். வெளியில் போக முடியாததால் யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர்கள் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும். அதே மாதிரி கணவன் எப்போது ஆபீசுக்குப்போவான், கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த மனைவிமார்களுக்கு கொரோனா கொடுமையே பரவாயில்லை என்று தோன்றியதில் வியப்பில்லை.

நான் சென்னை வந்தது என்பேத்தியின் கல்யாணத்துக்காக . அது முடிந்தவுடன்தான் எனக்கு ஆபரேஷன் ஆயிற்று. கல்யாணம் முடிந்த உடன் ஊருக்குத் திரும்பப் போகலாம் என்று பிளான் பண்ணினவன் என் இந்த லாக்டௌன் எப்போ முடியும் என்று தெரியாமல் அது ஒவ்வொரு மாதமும் எக்ஸ்டென்ட் ஆகிக்கொண்டே போனதால் நான் சென்னையில். இருந்து புறப்படமுடியாமல் போகவே அந்தப் பேத்தியின் பிள்ளைப்பிறப்பையும் பார்த்து விட்டுப்போவதற்குத்தான் ஆண்டவன் நம்மை இவ்வாறு சோதிக்கிறான் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தேன். நான் நினைத்தது கிட்டத்தட்ட பலித்து விட டது. ஒரு பேத்தி இன்று உண்டாகி இருக்கிறாள் என்ற நற்செய்தி என்காதுகளில் விழுந்தது.
அடுத்த ஆண்டு ( இதற்குள் கொரோனா ஓய்ந்து இருக்கும், அல்லது தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டு கொரோனா பயம் நீங்கி இருக்கும் என்று நம்பினேன்) பல கொரோனா தேவிகளும், கொரோனா தேவர்களும் அவதரித்து இருப்பர் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப் பட்டதாக தகவல் வர ஆரம்பித்தது.. சீனத்தடுப்பூசி, ரஷ்ய தடுப்பூசி, இங்கிலாந்து தடுப்பூசி, அமெரிக்க தடுப்பூசி என்று பல தடுப்பூசிகள் வந்துவிட்டன. அப்பா நாம் இந்த கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. முதல் தடுப்பூசி போட்டிக்கொண்டு அதற்குப் பிறகு மூன்று வாரங்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையில் “அப்பாடா” என்ற பெருமூச்சு விடும் போதா, கொரோனாவின் இன்னொரு வகை, முதலாம் கொரோனாவை விட வீரிய வகை பரவுகிறது என்ற செய்தி வர ஆரம்பித்தது. கொரோனாவின் இந்தப் புதிய அவதாரத்தின் முன் இப்பொழுது இன்னும் முழுவதாக மார்க்கெட்டுக்கு வராத தடுப்பூசிகள் எடுபடுமா, படாதா என்ற ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது. . மறுபடியும் மாஸ்க், சமூக இடைவெளி, சுய க்வாரண்டின், லாக்டௌன் இத்யாதி ஆரம்பம் ஆகிவிட்டது. இதற்கு முடிவே கிடையாதா? நான் கொரோனா நம்பர் 1 லிருந்து தப்பிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இருந்தபோது, கொரோனா 2 வந்ததனால் மறுபடியும் கவலை என்னை தாக்க ஆரம்பித்தது. நான் கிட்டத்தட்ட ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். இனி நான் வாழ்வது என்பது இந்த உலகிற்கும், என் குழந்தைகளுக்கு வெறும் பாரம்தான், போதாததற்கு என் தோழர்கள், , என் சக வயது நண்பர்கள் எல்லாம் என்னை விட்டுப்போன பின் நான் இங்கே இன்னும் வாழ்வதில் அர்த்தமில்லை. ஆண்டவனே இந்த வாழ்விலிருந்து எனக்கு விடுதலை கொடு என்று சென்ற ஆண்டு வரையிலும் பிரார்த்தித்துக் கொண்டு இருந்த நான், கொரோனாவில் இறந்தவர்களின் உடல் அனாதையாக குப்பைபோல் குழிக்குள் போடப்பட்டதைப்பார்த்ததும் என் தீர்மானத்தை ஒத்தி வைத்தேன். அதாவது இந்த கொரோனா இருக்கும் வரையில் நானும் இருந்து ஒரு மரியாதைக்குரிய மரணத்தை சந்திக்க தீர்மானித்த நேரத்தில்தான் இந்த கொரோனாவின் இரண்டாவது அவதாரம் வந்து சேர்ந்தது. எனவே என்னுடைய முடிவை பற்றிய முடிவை ஒத்தி வைத்து இருக்கிறேன்,எனக்கு மாத்திரமல்ல, என் விரோதிக்குக்கூட கொரோனா காலத்தில் மரணம் சம்பவிக்கவேண்டாம் என்று நான் வேண்டாத தெய்வங்களே இல்லை.

எழுதியவர் : ரா குருசுவாமி (25-Jun-22, 3:46 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே