கவிதைச் சூரியன்-வைரமுத்து

கருப்பு
கவிதைச் சூரியனே!

உன் கதிரொளியை
எதிரொளித்தே
பல கவிநிலவுகள்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பல கவி ஏகலைவர்களுக்கு
கட்டைவிரல் கேட்காத
துரோணர் நீ!

காதலிக்கத் தொடங்குபவர்களுக்கு
உன் கவிதைகளே
கை கொடுக்கும்

காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
உன் காதல் வரிகள்
விருந்தாகும்

காதல் காயங்களுக்கும்
உன் கவிதைகளே
மருந்தாகும்


அது எப்படி?
உன் சிந்தனை
வயலில் மட்டும்
கவிதை பயிர்கள்
தொடர்ந்து முளைத்துக்கொண்டே
இருக்கிறதே!

நீ
தமிழ் இலக்கியத்தையும்
பாடலில் இருத்தியவன்
இலக்கணத்தையும் கொஞ்சம் அதில்
பொருத்தியவன்


உனது பாடல்களும் கவிதைகளும்
திசைகளைக் கடந்தவை

நீ நாத்திகன்தான்!
இருந்தாலும்
உனக்குப் பிடித்த வார்த்தை
பிரம்மன்

நீயும் பிரம்மன்தான்!
உயிர்ப்புள்ள
கவிதைகளை படைப்பதால்.

நீ கொஞ்சம் ஒய்வெடு !
மற்ற கவிஞர்கள்
பிழைத்துக்கொள்ளட்டும்.

எழுதியவர் : டி.என். முரளிதரன் (7-Oct-11, 6:53 am)
பார்வை : 335

மேலே