பீடிலார் செல்வம் கருதுங் கடப்பாட்ட தன்று - நாலடியார் 261
இன்னிசை வெண்பா
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று 261
- நன்னெறியில் செல்வம், நாலடியார்
பொருளுரை:
குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும் பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தை வௌவால்கள் அணுகமாட்டா;
அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும் பெருந்தன்மை இல்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ் செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று.
கருத்து: பெருந்தன்மை யில்லாதவரது செல்வம் நலம் பயவாது.
விளக்கம்:
அவ்வப்போதும் குறையாததாகி என்றற்கு ‘அருகலதாகி' என்றார். அருகாமை குறையாமைப் பொருட்டாதல், "பருகு வன்னஅருகா நோக்கமொடு" என்பதனாற் காண்க.
மேலே, ஓடும் முள்ளுமிருத்தலின், வௌவாற்குப் பயன்படாவாயின, பெரிதணிமை உவமைக்கும்,. அருகாமையும் பன்மையும் பொருளுக்கும் உரைத்துக் கொள்க.
ஒப்புரவினாலேயே பீடுண்டாதலின்,1 ‘பீடிலார் செல்வம்' என்றார்.