தன்கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல் - பழமொழி நானூறு 153

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ன்’ மெல்லின எதுகை)

பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்
கொண்டதனை நாணி மறைத்தலால் தன்கண்ணிற்
கண்டதூஉம் எண்ணிச் சொலல். 153

- பழமொழி நானூறு

பொருளுரை:

அழகிய குளிர்ந்த நீரை உடைய புகாரில் உள்ள பூமியது அளவை அறியும்பொருட்டு சோழவரசன் மக்களைக் கேட்டான்; அறிவு சான்ற ஒருவன், ஒருவன் களவினால் ஆண்டு வருகின்ற நிலத்தை எடுத்துக் கூற நாணி அதனை மறைத்து இத்துணையென்று வரையறுத்துக் கூறினானாதலால் தன் கண்ணாற் கண்டு தெளிய அறிந்ததனையும் ஆராய்ந்து சொல்லுக.

கருத்து:

கண்ணாற் கண்டவற்றையும் அவற்றது நன்மை தீமை கூறுபாடு அறிந்தே கூறுக.

விளக்கம்:

சான்றவன், பிறன் களவினால் நிலங்கொண்டு ஆள்வதை அறிவானாயினும், அறிந்ததைக் கூறின் களவு புரிந்து வாழும் அவற்கு இறுதி வருமென்றெண்ணி அதனை மறைத்துக் கூறி அவனைப் பிழைப்பித்தான்.

ஆகவே, இவன் தான் கண்டதனை ஆராய்ந்து தீமை இலதாகக் கூறினான்.

எண்ணிச் சொலல் என்றது பிறவுயிர்க்குத் தீங்கு பயப்பதாயின் அதனைக் கூறாதொழிதல்,

நன்மை பயப்பதாயின் அதனைக் கூறுதல் என்ற கூறுபாடுகளை ஆராய்ந் துரைத்தலை.

'தன்கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே