தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல் - பழமொழி நானூறு 152
இன்னிசை வெண்பா
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல். 152
- பழமொழி நானூறு
பொருளுரை:
பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லும். ஆகையால், தேவர்க்கு உரைப்பது இது, மக்கட்கு உரைப்பது இது எனல் வேண்டப்படுவதன்று, தீமையை எடுத்துக் கூறும் நாவினுக்கு வறுமை இல்லை.
கருத்து:
பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதில்லை.
விளக்கம்:
கோவலன் இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது. இந்திரன் சினந்து ஏவிய மழையைக் கண்ணன் மலைகொண்டு தடுத்து ஆக்களைக் காப்பாற்றிய செய்தி, 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலை' என்று குறிக்கப்படுகின்றது. ஆக்களைக் காவல்செய்தல் சிறந்த அறமென்பார், 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்' என்றார்.
'தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்' என்பது பழமொழி.