ஈயாமையின் இழிவு – நாலடியார் 278
நேரிசை வெண்பா
(’ன’ ‘ம’ மெல்லின எதுகை)
தனதாகத் தான்கொடான்; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர்; - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து. 278
- ஈயாமை, நாலடியார்
பொருளுரை:
பொருள் தன்னுடையதாக இருந்த பொழுதும் தான்பிறர்க்கு வழங்க மாட்டான்;
அவனுக்குப் பின் அவன் தாயத்தவரும் அப்பொருள் தம்முடையதான காலத்திலும் வழங்க மாட்டார்;
அப்பொருள் முன்னே தன்னுடையதாக இருந்த பொழுது அவன் பிறர்க்கு ஒன்று வழங்கின் அத்தாயத்தவர் அதனைக் கடிந்து கொள்ள மாட்டார்;
தன்னுரிமைக்குப் பின் அத்தாயத்தவர் பிறர்க்கு யாதேனும் வழங்குங் காலத்தில் தானும் அதனை கடிந்து கொள்ள மாட்டான்;
அவ்வாறிருக்கும்போது, உரிமையுள்ளபோதே பிறர்க்கு உதவியாய் வாழ்ந்து பயன் பெறாமைக்குத்தான் காரணம் யாதோ?
கருத்து:
தனக்குரிமையுள்ள போதே ஈந்து பயன் பெறுதல் நன்று.
விளக்கம்:
ஈயாது தன் தாயத்தவர்க்கு வைத்தலால் அவர் பயன் பெறுதலில்லை; பின்னுள்ளோர்க்கு வேண்டுமென்று பாதுகாத்து வைத்தலிலும் பயனில்லை;
தனக்குரிமையுமிருந்து பிறரால் தடையுமில்லாத காலத்திற் பொருட்பயனை யடைதலே இனிதென்றும் விளக்கப்படுகிறது.
தலைமுறை தலைமுறையாகப் பொருட் பயனிழக்குங் கீழ்மக்களின் இயல்பு கூறி, இந்நிலை எத்துணை இரங்கத்தக்கதென ஈயாமையின் இழிவு இதனாற் புலப்படுத்தப்படுகிறது.