பெரும்பழியும் பேணாதார்க்கு இல் - பழமொழி நானூறு 170
நேரிசை வெண்பா
உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வதொன்(று) இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல்தண் சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல். 170
- பழமொழி நானூறு
பொருளுரை:
செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியில் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே!
அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் ஊறு செய்வதில்லை;
மிக்க பழியும் தன்னை அஞ்சிப் பொருட்படுத்தாதவர்களுக்கு மனவருத்தம் செய்தல் இல்லை.
கருத்து:
நல்லோர் பழிக்கு அஞ்சுவர், தீயோர் அஞ்சார்.
விளக்கம்:
பேணாதவர்க்கு மனவருத்தம் இல்லை என்று குறிப்பால் தீயோரை இகழ்ந்தவாறு.
'பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.