இழைத்தது இகவா தவரைக் கனற்றிப் பலிப்புறத்து உண்பார் உணா - பழமொழி நானூறு 176

நேரிசை வெண்பா
(’ரை’ ‘லை’ ‘ழை’ ’லி’ இடையின எதுகை)

உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால்
இழைத்த(து) இகவா தவரைக் கனற்றிப்
பலிப்புறத்(து) உண்பார் உணா. 176

- பழமொழி நானூறு

பொருளுரை:

உரைக்கத் தகாதனவற்றை உரைத்தவர் நாவினைப் பருந்து எறிந்துண்ணாதென்று கருதி மிகுதி கொண்டு இறுமாந்திருப்பவர்கள், ஒருவர் தம்மோடு மாறுபட்டு நின்றால் அவர் தம்மைத்தாம் செய்ய நினைத்ததைத் தவறாது முடிக்க வல்லாரை வெகுளச் செய்து பலிபீடத்தின் மேலிட்ட உணவினை உண்பவராவர்.

கருத்து:

அரசர்க்கு யாவரையும் இகழ்ந்து பேசிச் செருக்குறுதல் ஆகாததொன்றாம்.

விளக்கம்:

'பருந்தெறியாது என்று' என்றது தமக்கு அழிவில்லை யென்று அவர் கருதியபடி.

இகழ்ந்து பேசுதலால் துணையினையும் இழந்து பகைவரால் அழிவர் என்பது 'பலிப்புறத்துண்பார் உணா' என்றது,

வீரராய் இறந்து நடு கல்லாகி நிற்பர் என்னும் கருத்தின்றி அழிந்தொழிவர் என்பதைக் குறிப்பித்தது.

'பலிப்புறத் துண்பர் உணா' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-22, 4:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே