வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப - பழமொழி நானூறு 180

நேரிசை வெண்பா

வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண் பில்லா ஒருவரைத் - தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
பறைக்கண் கடிப்பிடு மாறு. 180

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெள்ளத்தைப் போன்று அளத்தற்கரிய மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய உறவினர்கள் இருக்கும் பொழுது, உள்ளத்தில் மாட்சிமையில்லாத ஒருவரை ஆராய்ந்து சூழ்ச்சிக் கண்ணின்றும் நீக்கி அவரை விலக்காது விடுதல் பறையின்கண் குறுந்தடியையிட்டு அடித்ததோடு ஒக்கும்.

கருத்து:

சூழ்ச்சியில் உள்ளம் மாட்சிமைப் பட்டாரைச் சேர்த்துக் கொள்க.அஃதிலாரை விலக்குக.

விளக்கம்:

பறை ஒருவன் கையாற் றன்னை அறிவித்ததொன்றனை, இடந்தோறுங் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்கும்.

கயவரும், தாம் அறிந்த மறையைச் சுமக்கலாற்றாது இடந்தோறுஞ் சென்று வலிய அறிவிப்பர். ஆதலின்,இவரைச் சூழ்ச்சியின் கண்ணின்றும் நீக்குதல் வேண்டும்.

'பறைக்கண் கடிப்பிடு மாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 12:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே