யாமொன்றும் பெற்றிலேம் என்பது பேதைமையே - பழமொழி நானூறு 181

நேரிசை வெண்பா
(’வ்’ ‘ய்’ இடையின எதுகை)

வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்னு மாறு. 181

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெற்றி பொருந்திய வேலேந்திய அரசன் ஏவல் கொண்டால் யாம் செயத்தகும் ஆற்றல் ஒரு சிறிதும் அடைந்தோமில்லையே என்று கூறுவது அறியாமையேயாம்;

அவர் ஏவிய செயலைத் துன்புறுதல் இன்றிச் செய்யத் தொடங்குக; அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதை ஒக்குமன்றோ?

கருத்து:

அரசன் ஏவியதைத் தட்டாது செய்யத் தொடங்குக.

விளக்கம்:

முடியாததை முடியாது என்று கூறுவதால் வரும் குற்றம் இல்லையாயினும், அரசன் ஏவல் கொள்ளலின் அருமை நோக்கியாயினும் மேற்கொள்ளாதொழிதலின் பேதைமையே என்று ஏகாரங் கொடுத்துத் தேற்றினார்.

'எவ்வம் இலராகிச் செய்க' என்று எவ்வத்தைத் தன்னொடு படுத்துக் கூறியது அரசன் ஆணையால் செயல் எவ்வமின்றி முடியும். நீ துன்புறாதொழிக என்பதாம்.

வேலையைச் செய்யுமாறு தூண்டியவன் உண்க என்று சொல்லுதல் போல, ஏவிய அரசன் செயல் முடிதற்கேற்ப உதவி செய்து முடிப்பான் என்பதாம். ஆதலின், நீ வருந்தாது ஆளாக இருந்து செய்யத் தொடங்குக என்பதாம்.

'செய்கென்றான் உண்கென்னுமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 1:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே