என்றூடு அறுப்பினும் மன்றூடு அறுத்தல் இல்லை - பழமொழி நானூறு 207
நேரிசை வெண்பா
அறிவன்(று) அழகன்(று) அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் : - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூ(டு) அறுப்பினும் மன்று. 207
- பழமொழி நானூறு
பொருளுரை:
காற்றால் எறியப்படும் அலைகள் கரைமேல் சென்று உலாவுகின்ற கடல் நாடனே!
சூரியனை ஊடறுத்துச் செல்லினும் அறிஞர்கள் பொருந்தியிருந்த அவையை ஊடறுத்துப் போகலாகாது;
அங்ஙனம் போதல் அறிவுடைமை யாகாது; பிறந்த குடிக்கு அழகினைத் தாராது; அறிவதாகிய அறநெறியும் ஆகாது; கீழ்மக்கள் என்று சொல்லப்படுதலையும் செய்யும்.
கருத்து:
அவையை ஊடறுத்துச் செல்லலாகாது.
விளக்கம்:
மன்றூடறுத்துச் சேறலின் தமதறிவு, குடிப்பிறப்பு, அறம், பெருமை முதலியன இழிக்கப்படுதலின் சேறல் ஆகாது என்றார்.
'என்றூடு அறுப்பினும் மன்றூடு அறுத்தல் இல்லை' என்பது பழமொழி.