இற்பிறந்த நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவது இல் – நாலடியார் 320

நேரிசை வெண்பா

இற்பிறப் பில்லார் எனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ(து) இல் 320

- அவையறிதல், நாலடியார்

பொருளுரை:

உயர்ந்த குடிப்பிறப்பு இல்லாதவர் எவ்வளவு நூல்கள் பயின்றாலும், ஏனைக் கல்லாதவரின் வழுச்சொற்களை இகழாது அடக்கும் பொறுமையாகிய கருவியை யுடையவராவரோ? ஆகார்;

ஆனால் உயர்குடியுட் பிறந்த சிறந்த அறிவுடையவர் புலனெறியுலகில் அடிப்பட்டுப் பழகிவரும் நூல்களின் நுண்பொருள் தெளியப் பெறாத கல்லாமை உடையவரது சிற்றறிவைத் தாம் ஆராய்ந்து காண்பதில்லை.

கருத்து:

நூலறிவின் சிறப்போடு குடிப்பிறப்பு மாண்பும் இருப்பின், புலவர்கட்குப் பொறுமையும் பெருந்தன்மையும் மிகும்.

விளக்கம்:

பிறர் சொல்லையென மாறுக:

கருவியரோ வென்றார், அக்கருவி கல்வி முதலியவற்றால் கிடைப்பதன்றாய்க் குடிப்பிறப்பினாற் சிறப்பிற் கிடைக்குமென்றற்கு;

நவின்ற நூலென்றது, அறியும் எளிமை பற்றி; அவ்வெளிமையிலும் அதனைத் தெளியாதவரது புல்லறிவு, தானே வெளிப்படையாய் மிகுந்த தெரியினும். பெரியோர் நோக்கம் அது காண்பதல்லாமையாற், புல்லறிவு அறிவது இல்' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே