மறந்தும் பரியலரால் கானகத்து உக்க நிலா - பழமொழி நானூறு 210

இன்னிசை வெண்பா

தாமகத்தால் நட்டுத் தமரென்(று) ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்?
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால்
கானகத்(து) உக்க நிலா. 210

- பழமொழி நானூறு

பொருளுரை:

மான் போன்ற மருண்ட நோக்கினை உடையாய்!

தாம் மனத்தால் நட்புக்கொண்டு சுற்றத்தார் என்னும்படி பழகியபோதும் தம்மால் நட்பாகக் கொள்ளப்பட்டார் மனதில் நாணம் இல்லாது நட்பிற்குத் தக்க நல்ல செயல்களைச் செய்து ஒழுகாவிடில் அந்நட்பால் என்ன பயனுண்டாம்?

மனத்தால் நட்புச் செய்த அவர்கள் மறந்தும் இரங்குதல் இல்லையென்றால் அந்நட்பு அனுபவித்தற்குரிய மக்களில்லாத காட்டில் எறித்த நிலவினை ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்களோடு கொண்ட நட்புப் பயனற்று ஒழியும்.

விளக்கம்:

'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா,
இனனும் அறிந்தியாக்க நட்பு' 793 நட்பு ஆராய்தல்

என்பராகலின், அங்ஙனம் ஆராயாது கொண்ட நட்புப் பயனற்று ஒழிதலைப்பற்றி வருந்தார் என்பது,

மனத்தால் நட்புச் செய்திருப்பினும் ஆராய்ந்து கொள்ளாமையின் அதற்காக வருந்துவதிலர் என்பார் 'மறந்தும் பரியலர்' என்றார்.

காட்டின்கண் எறித்த நிலா பயனற்றொழிதல் போல, அறிவிலாரோடு கொண்ட நட்பும் பயனற்று ஒழியும் என்பதாம்.

'கானகத் துக்க நிலா' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 11:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே