முழங்குறைப்பச் சாணீளு மாறு - பழமொழி நானூறு 211
இன்னிசை வெண்பா
உழந்ததூஉம் பேணா(து) ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்பச் சாணீளு மாறு. 211 பழமொழி நானூறு
பொருளுரை:
ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவு போல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே!
தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும் அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல் சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க அது முழநீளமாக நீளுவது போலும்
கருத்து:
தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையே செய்ய முற்படுவர்.
விளக்கம்:
'முழல் நீளுமாறு' என்றது முன்னினும் மிக்க தீமையையே புரிவார் என்பதைக் கருதி. 'முழம் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது 'சுரை ஆழ அம்மி மிதப்ப' என்பதைப் போன்று மொழி மாற்றிப் பொருள்கொள்ள வேண்டுதலின், மொழிமாற்றுப் பொருள்கோள்.
தழங்குகண், தழங்கண் என வந்தது விகாரம்.
'உழந்ததும்'என்றது,
‘அழிவி னவைநீக்கி ஆறுய்த்(து) அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு' என்றதைக் கருதி,
'முழங் குறைப்பச் சாண் நீளுமாறு' என்பது பழமொழி.