வீட்டுலகு அடைய வேண்டுவோர் இயல்பு – அறநெறிச்சாரம் 190
நேரிசை வெண்பா
இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்து வார் 190
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருதுகின்றவர்கள் இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து (விலகாவகை) ஞானமென்னும் வலிய கயிற்றால் இறுகக் கட்டுவர்.
குறிப்பு:
இந்தியம் - இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு, தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது.