352 உற்றிடத்து நல்லன உரைப்பது இன்சொல் – இனிய சொற்கூறல் 9

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

நதிமுதல் புகுவ தெல்லாம்
..நன்ககட் டிடைய டக்கும்
அதிர்கட லெனவும் ஈயார்
..அருத்தமஞ் சிகையே போலும்
வதிசெவி நுழைவ தெல்லா
..மனத்தினு ளடக்கித் தக்க
ததியறிந் துரைப்ப தன்றிச்
..சகலர்க்கு முரையார் மிக்கோர். 9

– இனிய சொற்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அறிவு மிகுந்தவர் ஆறு முதலான வந்தவற்றை எல்லாம் தன்பால் வைத்திருக்கும் கடலைப் போன்றவர், ஈயாதவர் செல்வம் அடங்கியிருக்கும் பணப்பெட்டியைப் போன்றவர்.

அறிவு மிக்கோர் செவி வழி நுழைந்தவற்றை எல்லாம் மனத்தினுள் அடக்கி, நல்லவற்றையே தகுந்த இடமும் தகுதியும் அறிந்து நல்லவர்க்குச் சொல்வர். அதைவிடுத்து எல்லோர்க்கும் சொல்ல மாட்டார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

நதி - ஆறு. அகடு - நடுவிடம். மஞ்சிகை - பெட்டி. வதி - வழி. ததி - உற்ற இடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-22, 8:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே