மறுபிறப்பினை ஒழிக்க வழி – அறநெறிச்சாரம் 208

நேரிசை வெண்பா

பறவை அரும்பொருள்; இன்சொல் முதிரை;
உறுதிக்கண் ஊன்உண் விலங்கு; - சிறியன
நீர்ப்புள்; குயக்கலம் புல்லவை; ஊர்வது
பேர்த்தீண்டு வாரா நெறி

- அறநெறிச்சாரம் 208

பொருளுரை:

இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ; இனிய சொற்களைக் கொள்; ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே); அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே); அற்பர்களது அவையை அகல் (சேராதே); இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.

பதவுரை:

அரும்பொருள் பறவை - இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ;

இன்சொல் முதிரை - இனிய சொற்களைக் கொள்;

உறுதிக்கண் ஊன் உண் விலங்கு - ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே);

சிறியன நீர்ப்புள் - அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே);

புல்லவை குயக்கலம் - அற்பர்களது அவையை அகல் (சேராதே);

ஊர்வது பேர்த்து ஈண்டு வாராநெறி - இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.


குறிப்பு: ஈ - பறக்கும் சிறிய உயிர்களில் ஒன்று; கொடு; கொள் - காணம் என்னும் தானியம் கொள்வாய்.

மடங்கல் - சிங்கமாகிய ஊன் உண்ணும் விலங்கு (மிருகம்); பின்வாங்காதே; உள்ளல் - உள்ளான் என்னும் நீர்வாழ் பறவை;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-22, 7:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே