அம்மா அப்பா’ கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
அம்மா அப்பா’ (கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்
ஆசிரியர் கவிதை உறவு
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 108, விலை : ரூ.90
கவிஞர் இரா.இரவியை எல்லோர்க்கும் பிடிக்கும். காரணம் அவர் வடிக்கும் கவிதைகள் எளிமையாக இருக்கும். இதமான சொற்களின் பயன்பாடு அவர்தம் கவிதைகளைச் சிறப்பாக்கும். அந்த வரிசையில் இப்போது அவரது அண்மைய நூல் இந்நூல், தாய் தந்தையரைச் சிறப்பிக்கிற கவிதைகள் செறிந்த இந் நூலில் அவர் பெண்மையைப் போற்றியிருக்கிறார். திருநங்கையர் நலம் குறித்துச் சிந்தித்திருக்கிறார். கவிஞரைக் கவர்ந்த கலாம் அவர்களைப் பாடியிருக்கிறார். நம்பிக்கைச் சிந்தனைகளும் நூலுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன.
“எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா” என்கிற கவிஞர் இரவி,குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் என்று தாயின் தன்மை குறித்துப் பாடியுள்ளார். “காணிக்கை கேட்காத கண்கண்ட கடவுள் அம்மா” என்றும், “உயிர் தந்த உயிர் வளர்த்த உயிர் அம்மா” என்று தாயை உயர்த்தேத்திப் பாடி மகிழும் அவர் தந்தைக்கும் மகுடம் சூட்டி மகிழ்வது சிறப்பு. ஆண் பெண் பேதம் என்பது அதன் எழுத்திலும் உச்சரிப்பிலும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் இரவி.
“எழுத்திலும் அநீதி.
ஆண் நெடில் தொடக்கம்,
பெண் குறில் தொடக்கம்”
என்று துளிப்பா ஒன்றில் தொட்டுக் காட்டுகிறார்.
பெண்களின் பங்கு அரசியலில் வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிற கவிதையும் பாராட்டிற்குரியது. கூடவே,
“இருபாலருக்கும்
பொதுவாக்குவோம்
சமையலறையை”!
என்பது அவரது கோரிக்கையாக அக்கவிதையில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையரைத் “திரைப்படங்களில் காட்டி கேலி கிண்டல் தெருவெங்கும் தொடர்கையில் வேதனை” என்று அவர்களுக்காகக் கொடி பிடிப்பது பாராட்டிற்குரியது. ரத்த தானம், கண் தானம் குறித்தும் சில படைப்புகளை நூலில் காண முடிகிறது.
அம்மாவைப் பாடிய கவிஞர் இரவி, அப்பாவையும் பாடிப் பெருமையுறுகிறார்.
“அம்மாவிற்கு வலி பத்து
மாதங்கள் தான்.
அப்பாவிற்கு வலி ஆயுள் உள்ளவரை”
என்பது உண்மையான உண்மை. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் குறித்த நினைவுகள் அருமை. கவிஞர் இரவி அவர்கள் “அப்துல் கலாமோடு அழகாய்ப் படமெடுத்துக் கொண்டவர், அவர் மனதில் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டவர்” என்று பாராட்டலாம் என்பதோடு எல்லாக் கவிதைகளுக்காகவும் கவிஞர் இரவியை மீண்டும் பாராட்டி மகிழலாம்
--