124 காரிகை செய் அழகெலாம் கணவன் கண்டு உவக்க மட்டுமே - கணவன் மனைவியர் இயல்பு 16
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
உண்ணல்பூச் சூடனெஞ் சுவத்தல் ஒப்பனை
பண்ணலெல் லாமவர் பார்க்க வேயன்றோ
அண்ணறன் பிரிவினை யறிந்துந் தோழிநீ
மண்ணவந் தனையிது மடமை யாகுமே. 16
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
தோழீ! உண்பது, பூச்சூடுவது, மனம் மகிழ்வது, அழகு செய்வது போன்றன எல்லாம் என் துணைவன் கண்டு களிப்பதற்கே அல்லவா! அத்தகைய என் வாழ்க்கைத் துணைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றிருப்பதை அறிந்தும், தோழி, நீ எனக்கு அழகு செய்ய வருகின்றாயே, இது அறிவுடைமை இன்றி மடமை ஆகுமல்லவா என்று தலைவி வருந்திச் சொல்கிறாள்.
பெண்கள் அழகு செய்வதெல்லாம் தங்கள் கணவர் மட்டுமே கண்டு மகிழ்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும் என்று இவ்வாசிரியர் கூறுகிறார்.
ஒப்பனை - அழகு. அண்ணல் – வாழ்க்கைத் துணைவன்; கணவன். மண்ணல் – அழகு செய்தல்.