334 சேரிடத்தால் சிறப்பு இழிவு யாரையும் சேரும் - தீயரைச் சேராமை 3
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மனிதர்கோள் மருவுநர் தமைக்கொண் டோதுவர்
புனிதமில் இடையின்கீழ் பொருவில் வாசத்தீங்
கனியையுந் தள்ளுவர் கயவர் தம்மைச்சேர்
இனியநற் குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே. 3
- தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மக்கள் தாங்கள் சேரும் மதிப்புடையவரின் மரியாதைக்கேற்ப அவர்கள் பெறும் மதிப்பையே பெறுவர்.
தூய்மையில்லாத இடத்தில் வீழ்ந்துவிட்டால் மணமுள்ள இனிய கனியையும் யாரும் கொள்ளாது தள்ளுவர்.
இவை போல், கீழோரைச் சேர்ந்த இனிய நற்குணமுடையவர்களும் இழிவு பெறுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கோள் - மதிப்பு. மருவுநர் - கூடுவோர்.