இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை யுடைமை தலை - பழமொழி நானூறு 273

நேரிசை வெண்பா
(’ண்’ ‘ன்’ ‘ம்’ மெல்லின எதுகை)

எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
மன்ன ருடைய உடைமையும் - மன்னரால்
இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை யுடைமை தலை. 273

- பழமொழி நானூறு

பொருளுரை:

எண்ணுதற்குக் குறைவு இல்லாத செல்வமும், உயர்குடிப் பிறப்பும், மன்னரைத் தம் வயத்தராய் உடைய உரிமையும், அரசர்களால் இத்தன்மை உடையாரெனப் புகழப்படுதலும் விரும்பத் தக்கனவல்ல, இப்பிறப்பிற்கும் மறு பிறப்பிற்கும் உறுதியாகிய தம்முடைய தலைவனாகிய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.

தம் ஐ - தம்முடைய தலைவனாகிய கடவுளை, உடைமை தலை - உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.

கருத்து:

ஒவ்வொருவரும் கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.

விளக்கம்:

நான்கும் இம்மைக்கல்லது பயன்படாமையின், இருமைக்கும் பயன்படுவதாய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது எனப்பட்டது. உம்மை பின்னர் வருவதாகிய மறுமையை உணர்த்தி நின்றது.

'தம்மை யுடைமை தலை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 10:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 141

மேலே