இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை யுடைமை தலை - பழமொழி நானூறு 273
நேரிசை வெண்பா
(’ண்’ ‘ன்’ ‘ம்’ மெல்லின எதுகை)
எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
மன்ன ருடைய உடைமையும் - மன்னரால்
இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை யுடைமை தலை. 273
- பழமொழி நானூறு
பொருளுரை:
எண்ணுதற்குக் குறைவு இல்லாத செல்வமும், உயர்குடிப் பிறப்பும், மன்னரைத் தம் வயத்தராய் உடைய உரிமையும், அரசர்களால் இத்தன்மை உடையாரெனப் புகழப்படுதலும் விரும்பத் தக்கனவல்ல, இப்பிறப்பிற்கும் மறு பிறப்பிற்கும் உறுதியாகிய தம்முடைய தலைவனாகிய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
தம் ஐ - தம்முடைய தலைவனாகிய கடவுளை, உடைமை தலை - உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
கருத்து:
ஒவ்வொருவரும் கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது.
விளக்கம்:
நான்கும் இம்மைக்கல்லது பயன்படாமையின், இருமைக்கும் பயன்படுவதாய கடவுளை உடைமையாகக் கொள்ளுதலே சிறந்தது எனப்பட்டது. உம்மை பின்னர் வருவதாகிய மறுமையை உணர்த்தி நின்றது.
'தம்மை யுடைமை தலை' என்பது பழமொழி.