எல்லையொன்று இன்றியே இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளார் - பழமொழி நானூறு 272

இன்னிசை வெண்பா

எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்
ஒல்லை வெகுளார் உலகாள்தும் என்பவர்
சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
கொல்லையுள் கூழ்மரமே போன்று. 272

- பழமொழி நானூறு

பொருளுரை:

உலகினை ஆளக்கடவேம் எனக் கருதும் அரசர்கள் வரையறையென்பது ஒன்று இல்லாமல் தீமை செய்தவர்களையும் விரைந்து சினத்தலிலர்;

மனைப்படப்பையில் ஒருவன் தனக்கு உணவாகப் பயன்படுமாறு வைத்து வளர்க்கப்பெறும் மரமே போல, சொற்களால் வளைத்து தமது அடிநிழலின்கீழ் இருக்கச் செய்து பாதுகாத்துக் கொள்வர்.

கருத்து:

பகைவரையும் நட்பாகக் கொண்டு ஒழுகுதலே அரசனது ஆக்கத்திற்கு ஏதுவாம்.

விளக்கம்:

'உலகாள்தும்' என்பவர் என்றார், தனக்குணவாகப் பயன்படுமாறு ஒருவன் தனது கொல்லையுள் வைத்த மரத்தைக் காத்தல் போல, அரசனும் பகையினைத் தன் தாள் நிழற்கீழ் கொண்டு பாதுகாவல் செய்வான் என்பதாம்.

பகையேற்பட்ட பொழுது இவர்களும் அவரோடு சேர்ந்து போரிழைப்பாராதலின், அங்ஙனஞ் சேராதவாறு தன்னோடு கூட்டவே பகையினை வென்று உலகினை ஆளலாம் என்பதாம்.

'கொல்லையுள் கூழ்மரமே போன்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 10:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே