தாம்காதல் கொண்டு முடிய எனைத்தும் உணரா முயறல் - பழமொழி நானூறு 309

இன்னிசை வெண்பா

இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையு மென்று
கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு
முடிய எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்து விடல். 309

பழமொழி நானூறு

பொருளுரை:

நிழலிடுகின்ற குடையினை உடைய தேர்மன்னர் எமக்கு இது பொருந்தும் என்று மிகவும் அவர்கள் விரும்புவனவற்றை அவர்களைச் சார்ந்தொழுகுவார் விரும்பி, முடியும்படி ஒன்றனையும் ஆராயாது முயற்சி செய்தல் கொடிய புலி முதலாயினவற்றைத் தன்னிடம் அழைத்ததனோடு ஒக்கும்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார் அரசன் விரும்புவனவற்றை விரும்பாதொழிதல் வேண்டும்.

விளக்கம்:

'காதலிப்ப' என்றது நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை யென்று இன்னோரன்னவற்றை. அவர் விரும்புவனவற்றைத் தாமும் விரும்பவே, உயிர்க்கிறுதி வரும் என்பார், 'கடிய கனைத்து விடல்' என்றார்.

அவர் விரும்புவனவற்றை விரும்பாதொழியவே எல்லாச் செல்வமும் உளவாம் என்பதாம். தாம் நினைத்தது முடியாது ஒழிதலேயன்றித் தமக்கே இறுதி வரும் என்பது,

‘கடியன கன்றவிடல்' என்பதும் பாடம். கனை என்பது ஓசைக்குறிப்பு. இஃது இடைநிகர்த்த ஓசையாதலின், அஃறிணையில் ஒருசாரனவற்றிற்கு மரபாக வழங்கப்படுகின்றது.

'கடிய கனைத்து விடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-23, 9:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே