அம்புலிமேல் ஒள்ளியகாட் டாளர்க்கு அரிது - பழமொழி நானூறு 323
நேரிசை வெண்பா
செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது. 323
- பழமொழி நானூறு
பொருளுரை:
நெருங்கிய மாலையை உடைய அரசன், தான் உறுதி கூறவும் கேளாது நல்லது அல்லாவற்றைச் செய்யப் பெறுவனாயின்,
அறிவுடைய அமைச்சர்கள், சந்திரனிடத்து சிலவற்றை யிட்டுக் கூறி குழந்தைகளை மிரட்டி உண்பிக்கின்ற தாய்மார் போல சூழ்ச்சி முதலியன செய்தலோடு பொய் உரைத்து வஞ்சித்தாயினும்,
உண்மையாய ஒள்ளிய எடுத்துக் காட்டுக்களை வற்புறுத்திக் கூறித் திருத்துதல் அவனால் ஆளப்படுவார்க்கு அரிதாகலான் அவனை அச்செயலினின்றும் மீட்பர்!
கருத்து:
அமைச்சர்கள் பொய் உரைத்தாயினும் அரசனை நல்வழிப்படுத்துவர்.
விளக்கம்:
அவ்வியம் செய்தலாவது, இச்செயலிற் புகுந்தால் இன்னது விளையுமென்று பொய்கூறி அரசனைத் திருத்துதல்; அவ்வியம் முதலியன கடியத்தக்கன வாயினும் அரசனை நெறி நிறுத்துதற் பொருட்டுப் பயன் படுத்தப்படுகின்றன வாதலின் அமையும் என்பார் அவ்வியமும் செய்வர் என்றார்.
அரிது என்பது அம்புலியின் இன்மைக் குணங்களை இல்லாதன கூறி உண்பித்தல் போல, பொய் முதலிய கூறி அரசனை நல்வழிப்படுத்துவர் என்பதாம்.
'ஒள்ளிய காட்டு ஆளர்க்கு அரிது' என்றது அரசன் ஆணைக்குக் கீழ்ப்பட்டு நடப்போர் இது செய்தல் தகாதென வற்புறுத்தித் கூறமுடியாது என்பது;
உறுதிகூறித் திருத்தல் அமைச்சர் கடமையாதலின், இங்ஙனம் கூற இயலாதாயினும் பொய் முதலியன கூறியாவது திருத்துவர் என்பதாம்.
'ஒள்ளிய காட்டு ஆளர்க்கு அரிது' என்பது பழமொழி.

