அஃதன்றோ கல்லொடு கைஎறியும் ஆறு - பழமொழி நானூறு 382
இன்னிசை வெண்பா
அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவ ரேனும்,
நிகர்ஒன்றின் மேல்விடுதல் ஏதம்; - நிகரின்றி
வில்லொடுநேர் ஒத்த புருவத்தாய்! அஃதன்றோ,
கல்லொடு கைஎறியும் ஆறு. 382
- பழமொழி நானூறு
பொருளுரை:
வில்லினொடு நேராக ஒத்த புருவங்களை யுடையாய்!, போர் நடவாநின்ற போது ஒப்புமை யின்றிப் போராற்ற வல்லரேனும் ஒப்புமை கருதலின்றி (வலியார்) மேற்படை விடுதல் துன்பந் தருவதாம்; கல்லொடு மாறுகொண்டு கையால் எதிர்த்துத் தாக்குதலை அஃது ஒக்குமன்றோ?
கருத்து:
வீரர்கள் தம்மின் வலியார்மேற் சேறல் துன்பம் பயப்ப தொன்றாம்.
விளக்கம்:
போராற்ற வல்லரேனும், பகைவருடைய நிலைமை அறியாது, வலியார்மேற் படை தொடுத்தல், கல்லொடு மாறு கொண்டெறிந்த கையை யொப்பத் துன்பம் பயப்பதாம்.
'கல்லொடு கையெறியு மாறு' என்பது பழமொழி.